Wednesday, October 01, 2014
திருப்பூர் கல்லூரி சாலை மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அழகுராஜா(வயது 30). பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(28). கடந்த 25–ந்தேதி அதிகாலையில் அழகுராஜாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி, ஜெயலட்சுமியின் 2 செல்போன்கள், ரூ.400–ஐ திருடிச்சென்று விட்டனர். காலையில் எழுந்த ஜெயலட்சுமி தனது செல்போனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் விடாமல் தனது எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது திடீரென செல்போனை திருடியவன், ஜெயலட்சுமியிடம் பேசினான். அப்போது அவன், செல்போனை கொடுக்க வேண்டுமானால் தனக்கு ரூ.3 ஆயிரம் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு எனது வீட்டுக்கு வந்து செல்போனை கொடுத்துவிட்டு ரூ.3 ஆயிரத்தை வாங்கி செல்லுமாறு ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி வீட்டுக்கு 16 வயது சிறுவன் செல்போன்களை கொண்டு வந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த சிறுவன், தான் திருடியதை ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment