Tuesday, August 12, 2014
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் கம்பம் மெட்டு பகுதி உள்ளது. கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதி தமிழக –கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டுவரை பரவி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள கேரள பகுதியில் குடியிருப்புகள் உள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு கம்பம் மெட்டு வண்டானம் பகுதியை சேர்ந்த மோன்குட்டன் என்பவரின் 2 எருமை கன்றுகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. இவை இரண்டும் கொல்லப்பட்டு காட்டில் கிடந்தது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எருமைகன்றுகளை சிறுத்தை புலி கொன்று இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் கேரள– தமிழக வன எல்லையோர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே வனத்தில் இருந்து வெளியேறி விவசாயத்தை அழிக்கும் குரங்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து தூக்கத்தை தொலைத்து உள்ளனர்.
எனவே வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.