Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by farook press in ,    





கோபி, : கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வலியுறுத்தல்.
திருப்பூர் மற்றும் புது திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சாயத்தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, கோவை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதுதவிர ஈரோடு மாவட்டம் கோபி, அந்தியூர், அத்தாணி, பங்களாபுதூர், கள்ளிப்பட்டி, நம்பியூர், கணக்கம்பாளையம், டி.என்.பாளையம், கணபதிபாளையம், புதுக்கரைபுதூர், கூகலூர், குன்னத்தூர், கொளப்பலூர், கெட்டிசெவியூ, சிறுவலூர், திங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
 இவர்களை தனியார் நிறுவனங்கள் வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் காலையில் வீட்டில் இருந்தே அழைத்து வந்து பின்னர் இரவு மீண்டும் வீட்டிற்கே கொண்டு சென்று விடுகின்றனர். இதற்காக கோபி பகுதியில் மட்டும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும், குறித்த நேரத்திற்கு நிறுவனத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காக அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் இதே போன்று பனியன் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அத்தாணி நோக்கி சென்ற வேன் புதுக்கரைபுதூர் அருகே சாலையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அதே போன்று கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தனியார் நிறுவன வேன்கள் சுமார் 12க்கும் மேற்பட்ட விபத்துகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கும் வே கக்கட்டு ப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று அனைத்து இந்து இயக்கம் மற்றும் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுவாமி விவேகானந்தர் தர்ம பிரச்சார சேவா சமிதி அமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜகுரு மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக தனியர்£ நிறுவன வேன்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்ற வாகனங்களை சோதனை நடத்தும்போது தனியார் நிறுவன வாகனங்களை முறையாக சோதனை நடத்துவதில்லை. அதனால் விதிமுறையை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆட்களை ஏற்றிக்கொண்டும், அதிவேகத்துடனும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது போன்று தனியார் நிறுவன வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.
இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஒரு வாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 comments: