Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    

தென்காசி: தென்காசி அருகே நள்ளிரவில் காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் மதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். குற்றாலம் வந்து விட்டு திரும்பிய போது இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள குமுத்திராம்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(33). புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்ட இணைச் செயலாளர். இவரது நண்பர்கள் மேலூர் ஜோதிநகரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராஜ்குமார் (36), குமுத்திராம்பட்டி மதிமுக பிரமுகர் சவுகத்அலி (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (46), பள்ளப்பட்டிபுதூர் செல்வராஜ் (42), வேலு (35) ஆகிய 6 பேர் நேற்று மாலை குமுத்திராம்பட்டியில் இருந்து காரில் குற்றாலம் வந்தனர்.

அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்த அவர்கள், நள்ளிரவு 12 மணியளவில் காரில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். காரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் பச்சையப்பன் (40) ஓட்டினார். செங்கோட்டை-தென்காசி மெயின் ரோட்டில் இலஞ்சி கொட்டாரங்குளம் அபாயகரமான வளைவு பகுதியில் சென்றபோது, மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு பஸ்சுடன், கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பச்சையப்பன், செல்வம், செல்வராஜ், வேலு, சவுகத்அலி ஆகிய 5 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி இறந்தனர். பன்னீர்செல்வம், ராஜ்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் குற்றாலம் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பன்னீர்செல்வம், ராஜ்குமார் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தால் கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடவுள் அருளால் உயிர் தப்பினார்

கார் விபத்தில் சிக்கியது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிந்து, இரவே தென்காசி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தனர். விபத்தில் காயமடைந்த பன்னீர்செல்வத்தின் மனைவி நந்தினி கூறும்போது, நான் குமுத்திராம்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக உள்ளேன். எனது கணவரும், அவரது நண்பர்களும் நேற்று ஊரிலிருந்து காரில் குற்றாலம் வந்தனர். அருவியில் குளித்து முடித்ததும் எனது கணவர் போன் செய்து, இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு விடுவோம் என கூறினார். சிறிது நேரம் கழித்து வேறொருவர் எனக்கு போனில் தொடர்பு கொண்டு, என் கணவர் சென்ற கார் விபத்தில் சிக்கி விட்டதாக கூறினார். பதறியடித்து கொண்டு இங்கு வந்தேன். கடவுள் அருளால் எனது கணவர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். மற்றவர்களை நினைத்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது’ என்று கண்ணீர் மல்க கூறினார்
.

0 comments: