Wednesday, July 16, 2014

On Wednesday, July 16, 2014 by Anonymous in    

தி.மு.க.வை வெறுத்தவர் அல்ல காமராஜர்: கருணாநிதி அறிக்கை

காமராஜர் தி.மு.க.வை வெறுத்தவர் அல்ல என்றும், மாற்றாரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாளையொட்டி, அவரைப் பற்றிய ஒரு சில செய்திகளை நினைவு கூர்வது, தி.மு.க. அவருக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும் என்று கருதுகிறேன். 

2006 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந் தேதியை கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுப்போம்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ந் தேதியை ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அரசு அறிவித்து தி.மு.க. ஆட்சியில் 2006 மே 24-ந் தேதி ஆணை வெளியிட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. 

அதன்படி, 2006 ஜூலை 15-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் காமராஜரின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. 

அத்துடன் அவ்விழாவில் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

பின்னர், 2007 ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும், 2008 ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு; தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. 

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வேளையில் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் அல்ல. ஆனால், 6 மாத காலத்தில் அவர் பேரவை அல்லது மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

அதனால் அப்பொழுது குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அப்போது பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் “குணாளா, குலக்கொழுந்தே” என எழுதி, பெருந்தலைவர் காமராஜரின் வெற்றிக்குப் பாடுபடுவோம் எனக்கூறி ஆதரவு தெரிவித்தார். அதன்படி, தி.மு.க. காமராஜரின் வெற்றிக்காக பாடுபட்டு அவரை வெற்றி பெறச் செய்தது. 

சென்னை மாநகராட்சி தி.மு.க. நிர்வாகத்தில் இருந்தபோது பெருந்தலைவர் காமராஜருக்கு, பெரியார் பாலத்திற்கு அருகில் சிலை அமைத்து, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவைக் கொண்டு 1961 அக்டோபர் 9-ந் தேதி அச்சிலையைத் திறந்து வைத்தது தி.மு.க. மேலும், பெருந்தலைவர் காமராஜர் 1975 அக்டோபர் 2-ந் தேதி மறைந்தபின், கிண்டி காந்தி மண்டபத்திற்கு அருகில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பி முகப்பில் பெருந்தலைவர் காமராஜரின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது. 

1990-ல் சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிலையத்திற்கு “காமராஜர் முனையம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

சென்னை கடற்கரைச் சாலைக்கு 1997-ல் “காமராஜர் சாலை” எனப் பெயர் சூட்டப்பட்டது. கடற்கரைக்கு அருகில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை இருந்த காரணத்தால், குமரி முனையில் காமராஜரின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணி மண்டபம் கட்டமுடியாத நிலை இருந்தது. அதன்பின், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி, கோரிக்கை வைத்து, அனுமதி பெற்று, காமராஜர் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 2.10.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. 

2006-ல் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி சமூகப் பொதுத் தொண்டுகளில் சிறந்து விளங்கும் சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையம் 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2010 ஜூலை 19-ந் தேதி பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. 

அப்படிப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் விழாதான் இன்று! மறைந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம். 

கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, காவிரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன். 

பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவரே காமராஜர்தான். 

மாற்றாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாலை நேரப் பொதுக் கூட்டங்களில் பேசும்போது எப்படியெப்படியோ தாக்கிக் கொள்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதற்காக தி.மு. கழகத்திடம் வெறுப்பைக் காட்ட வேண்டிய பெருந்தலைவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அதனால்தான் அவர் பெருந்தலைவர் ஆனார். 

0 comments: