Wednesday, July 16, 2014

On Wednesday, July 16, 2014 by Anonymous in    


சென்னை.ஜூலை.17 - முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் சாலை பாதுகாப்பு விதிகளில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று சட்டபேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம் கொண்டுள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் பாப்பா சுந்தரம் கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து கூறியதாவது:_
போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி: உறுப்பினர் தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக இருக்கின்றன என்ற ஒரு கருத்தை இங்கே வலியுறுத்தினார்கள். மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் சாலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென்பதற்காக, இதுவரை இல்லாத அளவிற்கு, சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், சாலைப் பாதுகாப்பிற்காகவும் 65 கோடி ரூபாய், இந்த ஆண்டு மட்டும் மாண்புமிகு அம்மா அவர்கள் சாலைப் பாதுகாப்பு நிதி வழங்கியிருக்கின்றார்கள். அதன் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக சாலை விபத்துகள், பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, 2012 ஆம் ஆண்டு சாலை விபத்துகளினுடைய எண்ணிக்கை 67,757. 2013 ஆம் ஆண்டு, 66,238. சாலை விபத்துகளினுடைய சதவீதம் குறைந்திருக்கின்றன. 2012 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களினுடைய உயிரிழப்புகள் 16,175. அது 2013 ஆம் ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுடைய சீரிய நடவடிக்கைளின் காரணமாக 15,563 ஆகக் குறைந்திருக்கின்றன. இது கடந்த ஆண்டடைக் காட்டிலும் 3.78 விழுக்காடு குறைவாகும். அதேபோல மொத்த வாகனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது 2009 ஆம் ஆண்டு 0.51 சதவீதமாக இருந்த அந்த விபத்துகள் 2012 ஆம் ஆண்டு 0.41 சதவீதமாகவும், 2013 ஆம் ஆண்டு 0.36 சதவீதமாகவும் குறைந்திருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இரு சக்கர வாகனங்கள் உயர்வு 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து 44,57,010 வாகனங்கள், 5 ஆண்டுகாலம் சேர்த்து இரண்டு சக்கர வாகனம் உயர்வு எண்ணிக்கை 44,57,010 வாகனங்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டுகாலம் மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில் இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது 43,87,802 வாகனங்கள். தற்போது வித்தியாசம் மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 69,208 வாகனங்கள்தான். 5 ஆண்டுகளுக்கும், 3 ஆண்டுகளுக்கும் உள்ள இடைவெளி. இப்படி வாகன எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும்கூட ஒட்டுமொத்த விபத்துக்களின் சதவிகிதம் குறைவிற்குக் காரணம் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எடுத்த சீரிய நடவடிக்கை. இரண்டு சக்கர வாகனங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. முழுமையாக விபத்துகளை தடுக்க வேண்டும், விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சாலைப் பாதுகாப்பு நிதியாக ரூ.65 கோடியினை மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர்களின் கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை தமிழகத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய ஆட்சிமுறையினை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அங்கே வலியுறுத்தி பேசப்பட்டது. மற்ற மாநிலங்களுக்கு சாலை பாதுகாப்பிற்கு எடுத்துக்காட்டாக, சாலை பாதுகாப்பிற்கு உண்டான திட்டங்களை செயல்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, திகழக்கூடிய மாநிலம் -- பொற்கால ஆட்சி செய்யக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மாநிலம் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

0 comments: