Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
உடுமலை : கேரள மாநிலம் மறையூர் அருகே, கரும்புத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன.

கேரள மாநிலம் மறையூர், காந்தலுார் வனச்சரகம், பயஸ்நகர் பீட் பகுதியில், வேட்டைத்தடுப்புக் காவலர் நாகராஜூக்கு சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் இவரது தோட்டத்தின் ஒரு பகுதியில், மூன்று சாக்கு மூட்டைகள் கிடந்தன. சந்தேகமடைந்த நாகராஜ், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.துணை வனச்சரகர் அஜி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் அப்பகுதிக்கு வந்து, சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 14 சந்தன மரக்கட்டைகள் சாக்கு மூட்டைகளில் இருந்தது. சந்தன மரக்கட்டைகளை வெட்டி, மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து, வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரள வனப்பகுதி எல்லைகளில், இருமாநில வனத்துறையினரிடையே, எல்லை பிரச்னையால் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை யார் மேற்கொள்வது என தெரியாமல் திணறுகின்றனர். இருமாநில வனத்துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை பயன்படுத்தி, மர்ம நபர்கள் தொடர்ந்து, சந்தனக்கட்டைகளை கடத்தி வருகின்றனர்.கடந்த ஜூலை மாதம், மறையூர் வனப்பகுதியில், சந்தனக்கட்டைகளை தொடர்ந்து கடத்தி வந்த, சேலம் கரிமாந்துறையை சேர்ந்த லட்சுமணன், 45 மறையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டான். முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதினர்.

ஆனால், 3ம் தேதி, காந்தலுார் வனச்சரகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு சந்தன மரங்கள், மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டன. இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தில் குற்ற வாளிகள் பிடிபடாத நிலை யில், 10 நாள் இடைவெளியில் மீண்டும் சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: