Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்; போக்குவரத்து பாதிக்கப்
படுகிறது.
திருப்பூர் பி.என்.,ரோட்டில், மேட்டுப்பாளையம் ஸ்டாப் உள்ளது. அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே செல்லும் குடிநீர் குழாயில், சில மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. சரி செய்யும் பணிக்காக குழி தோண்டி, அப்படியே போட்டு விட்டுச் சென்றனர்.பணியை முடிக்காததால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது; குழியும் பெரிதாகி வருகிறது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கும்; திருச்சி, தஞ்சாவூருக்கும் இவ்வழியாக பஸ்கள் செல்கின்றன. இது, ஒருவழி பாதை. மேலும், சாலை ஏற்கனவே குறுகலாக உள்ளது. போதாக்குறைக்கு, குழி தோண்டி, ரோட்டில் பாதியளவு மண் குவித்து வைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் வரும்போது பாதசாரிகளால் ஒதுங்கக்கூட முடிவதில்லை.கடைகளின் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களால், மேலும் இடைஞ்சல் ஏற்படுகிறது."பீக் ஹவர்ஸில்' போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை; தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்களை சரிசெய்து, குழியை மூடி, விரைவில் சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அப்பகுதி குடிநீர் ஆய்வாளர் சுகுமாரிடம் கேட்டபோது, ""மெயின் குடிநீர் குழாய் மற்றும் டேங்க், பங்களா ஸ்டாப்பில் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் சப்ளையை நிறுத்தும்போது, குழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்பே, பணி செய்ய வேண்டும்.""இந்த வாரம் மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கும்போது, தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும். அப்போது பணியை துவங்கி, விரைந்து முடிப்போம்,'' என்றார்.

0 comments: