Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
அவிநாசி : அவிநாசி அருகே, மந்தகதியில் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணியை, விரைவாக முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதூர் - மங்கலம் ரோட்டில், பாலமுருகன் கோவில் அருகில் பள்ளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் ரோடு மேடாக்கப்பட்டு, அதன் கீழ் மழை நீர் வடிகால் குழாய் பதிக்கப்பட்டது. அதன் மறுமுனையில், மழை நீர் வெளியேறும் வகையில், ஆறு அடி ஆழத்தில் வடிகால் கட்டப்பட்டது. அதன் முடிவில், காசிகவுண்டன்புதூரில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் இணைக்காமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயில், கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், "நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால் கட்டி, மூன்று மாதமாகிறது. நீர் வெளியேறும் பாதை (டிஸ்போசபிள் பாயின்ட்) அமைக்காததால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. விரைவாக பணியை முடித்து, கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "மழைநீர் வடிகால் வெளியேறும் வகையில், மங்கலம் ரோட்டில் அமைக்கப்பட்ட கால்வாயின் மறுமுனையை, சாக்கடை கால்வாயுடன் இணைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் அப்படியே நிற்கின்றன. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். காசிகவுண்டன்புதூர் வழியாக குழாய்களை பதித்து, கழிவுநீரை வெளியேற்றும் வகையில், பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்,' என்றார்.

0 comments: