Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர், பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதிராணியை சந்தித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் மனு கொடுத்தார்.கலந்தாய்வு கூட்டம்

இந்தியாவில் பருத்தி பஞ்சு விலை சீராக்கும் வகையில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதிராணி தலைமையில் நேற்று டெல்லியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார், நிப்ட்–டீ கல்லூரி தலைவர் முருகானந்தம், நூற்பாலை அதிபர்கள் சங்கமான சைமா, டாஸ்மா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதுபோல் ஆந்திரா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த நூற்பாலை அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டது.பஞ்சு விலை

கூட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, ‘வரும் காலங்களில் பருத்தி பஞ்சு விலை சீராக இருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஜவுளித்துறை மந்திரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருத்தி பஞ்சு விலை உயர்வு காரணமாக அடிக்கடி நூல் விலை அதிகரித்து அதனால் பின்னலாடை துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தோம்.பருத்தி பஞ்சு தட்டுப்பாடு காரணமாக நூல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பின்னலாடை தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். இந்திய நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி பஞ்சு தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ள பருத்தியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக மத்திய மந்திரி தலைமையில் இந்திய பருத்தி ஏற்றுமதி கழகம், மத்திய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு மீண்டும் நூற்பாலை அதிபர்களுடன் கூட்டம் நடத்தி தகுந்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்றார்.மேலும் பருத்தி பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

0 comments: