Wednesday, January 13, 2016

On Wednesday, January 13, 2016 by Unknown in , ,    
திருச்செந்தூர் பகுதியில் ஆலந்தலை தொடங்கி கல்லாமொழி வரையிலான 16 கி.மீ. தொலைவிலான கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் கூட்டம், கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்க தொடங்கின.

மணப்பாடு பகுதியில் கடலின் நடுவே உள்ள மணல் திட்டில் நிறைய திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் பல உயிரிழந்தன. 15-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிருக்கு போராடின.

இதேபோன்று குலசேகரன்பட்டினம் வடக்கூர் கடற்கரையிலும் திமிங்கலங்கள் செத்துக் கிடந்தன. ஆலந்தலை, கல்லாமொழி, பதுவைநகர் பகுதிகளிலும் சில திமிங்கலங்கள் கடற்கரையில் செத்துக்கிடந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகளும், ஆராய்ச்சியாளர்களும் கடற்கரை பகுதியில் திரண்டனர். மொத்தம் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாகவும், அவற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், 53 திமிங்கலங்களை கயிறு கட்டி படகின் மூலம் இழுத்துச் சென்று, சற்று ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டன, கரை ஒதுங்கியதில் 42 திமிங்கலங்கள் உயிரிழந்தன என தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தெ.தியாகராஜன், தாசில்தார் வெங்கடாசலம், மன்னார் வளைகுடா கடல் உயிரின காப்பக உதவி இயக்குனர் தீபக், மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஐசக், தமிழ்நாடு மீன் வளக் கல்லூரி பேராசிரியர்கள் சீனிவாசன், ஜவகர், சிதம்பரம், ஆனந்தன் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

திமிங்கலங்கள் கூட்டம், கூட்டமாக கரை ஒதுங்கியது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது பற்றி மணப்பாடை சேர்ந்த ராஜன் என்ற மீனவர், “நேற்று (நேற்று முன்தினம்) மாலை 5 மணிக்கு மேல் திமிங்கலங்கள் கூட்டம், கூட்டமாக கரை ஒதுங்கின. இது வினோதமானது. 1973-ம் ஆண்டு, நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, இதே போன்று திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அப்போதுகூட இந்தளவுக்கு அதிக எண்ணிக்கையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கவில்லை” என கூறினார்.

குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த டிட்டோ என்பவர், “உள்ளூர் மீனவர்கள் கண்காணித்து இருக்காவிட்டால் நிறைய திமிங்கலங்கள் செத்துப்போய் இருக்கும். விடிய விடிய மீனவர்கள் விழித்திருந்து, அவற்றை திரும்ப கடலில் கொண்டு போய் விட்டனர்” என்றார்.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் கே.வெங்கடராமன் இதுபற்றி கூறுகையில், “திமிங்கலங்கள், டால்பின்கள் போன்றவை கூட்டம், கூட்டமாக வாழும். தண்ணீருக்கு அடியில் ஏதேனும் மாற்றங்கள் நடக்கிறபோது, அவற்றின் தலைவனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதை கண்டால், மற்றவை வழக்கமான பாதையில் இருந்து விலகுகின்றன. அவை கடலோரங்களுக்கு வருகின்றன. இதனால் அவை செத்து மடிகிற நிலை ஏற்படுகிறது” என்றார்.

முதன்முதலாக 1852-ம் ஆண்டு, கொல்கத்தாவில் உப்பு ஏரியில் இப்படி கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதன்பின்னர் 1973-ம் ஆண்டு, இந்திய கடலோர பகுதிகளில் 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின என்றும் அவர் கூறினார்.

இதன் பின்னணி குறித்து கடல் விஞ்ஞானி வேலுமணி கூறும்போது, “இது அசாதாரணமான ஒன்று. அவை எதனால் கரை ஒதுங்கின என்பதை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். கரை ஒதுங்கிய திமிங்கலங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதில் கடலியல் வல்லுனர்கள் உதவியும் தேவைப்படும்” என கூறினார்.

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அமல் சேவியர், “கடல் சோனார்கள் (நீர் ஆழம் அளவிடும் சாதனங்கள்), சுற்றுச்சூழல் மாசுபடுதல் என பல காரணங்கள் இருக்கலாம். காரணம் உடனே தெரியாது” என்றார்.

கடல் வல்லுனர்கள் சிலர், “அலைகள் குறைவாக இருக்கிறபோது இவை கரை ஒதுங்குகின்றன. அலை உயரமாக இருக்கிறபோது, அவற்றால் ஆழ் கடலின் உள்ளே போக முடியாமல் ஆகி விடுகிறது. இரை தேடித்தான் இவை கூட்டம் கூட்டமாக சேருகின்றன. உலகம் முழுவதும் இப்படி நேரிடுகின்றன. ஆனால் சரியான காரணம் என்ன என்பதை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும்” என்கின்றனர்.

ஆனால் நேற்று முன்தினம் மாலை பிலிப்பைன்சில் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளி அளவிலும், இந்தோனேஷியாவில் 6.9 புள்ளி அளவிலும் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அவற்றின் தாக்கத்தாலும் இப்படி திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

0 comments: