Friday, March 27, 2020

On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 195 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. 


திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களையும், புகார்களை தெரிவிக்கலாம். 


இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கியது முதல் தற்போது வரை 195 புகார்கள் வந்துள்ளது. இதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. திருச்சி- மதுரை சாலையில் உள்ள கள்ளிக்குடி புதிய காய்கறி வணிக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 78 ஆண்கள், 34 பெண்கள் என 112 வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர் அனுமதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த 22ம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 86 பயணிகள் வந்தனர். இதில் 22 பயணிகளுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது பயணி மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே விமானத்தில் வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4,120 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள்  அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இந்த வகையில் 2,262 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. மீது ஆயிரத்து 498 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி விரைவில் நிறைவு பெறும். இவர்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வந்தால் பாஸ்போர்ட் முடக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 36 சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடிய மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.  பொதுமக்கள் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி அனைவரும் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

0 comments: