Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர், :திருப்பூரில் கெமிக்கல் நிறுவன உரிமையாளரிடம் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் போல் நடித்து ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.   
 திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகரில் வசிப்பவர் சதானந்தம் (58). இவர், அதே பகுதியில் கெமிக்கல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரின் வீட்டிற்கு ஒரு காரில் மூன்று பேர் வந்தனர். அப்போது சதானந்தம் வெளியூர் சென்றிருந்ததால் அவருடைய மனைவி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த மூன்று பேரும், சதானந்தத்தின் மனைவியிடம், தாங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் என்றும், சேலத்தில் இருந்து வந்திருப்பதாகவும் அறிமுகமாகியுள்ளனர். மேலும், சதானந்தம் கெமிக்கல்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், எனவே, அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சதானந்தத்தின் மனைவியிடம் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சதானந்தம் அங்கு இல்லாததால் அவருடைய செல்போன் எண்ணை மட்டும் அவருடைய மனைவியிடம் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
அதை தொடர்ந்து, மறுநாள் அந்த மூன்று பேரும், சதானந்தத்தை செல்போனில் தொடர்பு கொண்டு  பல்லடம் ரோட்டில் வித்யாலயம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற சதானந்தத்திடம், கெமிக்கல்களை முறைகேடாகவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், ரூ.1 லட்சம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதானந்தம், முறையான அங்கீகாரத்துடன் விற்பனை செய்து வருவதால் ரூ.1 லட்சம் பணம் தர முடியாது என அவர்களிடம் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று பேரும், அவரை கட்டாயப்படுத்தி, அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்ததுடன், கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.
பின்னர், உடனடியாக இதுகுறித்து சதானந்தம், வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த எஸ்ஐ அப்துல்நிகார் விசாரணையில் இறங்கினார். விசாரணையில், அந்த மூன்று பேரும், சதானந்தத்திடம் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் போல் நடித்து பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. மேலும், மூன்று பேரும், திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்த சேகர் (49), பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மனோகரன் (40), செட்டிபாளையத்தை சேர்ந்த தனபால் (40) என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதை தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் இருக்கிறதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் போல் நடித்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: