Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை, : அறுவடை செய்த சூரியகாந்தி விதைகளை விவசாயிகள் உடனடியாக விற்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. 
வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சாகுபடியாகும் சூரியகாந்தியின் நிலப்பரப்பில் 79 சதவீதம் மற்றும் உற்பத்தியில் 80 சதவீதம் பங்களிப்பை கரூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தர்மபுரி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அளிக்கிறது. 
சூரியகாந்தி கார்த்திகை (அக்-நவ), சித்திரை(ஏப்-மே) பட்டங்களில் பயிரிடப்படுகிறது. அதிகமான வரத்து மார்ச்-மே, ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் காணப்படுகிறது. தற்போது, சித்திரை பட்டத்தில் (ஏப்-மே) விளைவித்த சூரியகாந்தி சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வெள்ளகோவில், மூலனூர், கொடுமுடி ஆகியன முக்கிய சூரியகாந்தி சந்தைகளாகும். சன்பிரட், கங்கா காவேரி ஆகிய வீரிய சூரியகாந்தி விதைகள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இறவை சாகுபடியில், சராசரியாக ஏக்கருக்கு 1000 முதல் 1200 கிலோ வரை சூரியகாந்தி விதை மகசூல் எடுக்கலாம்.
ஆனால், தண்ணீர் பற்றாக்குறை, பூச்சித்தாக்குதல் மற்றும் வேலை ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்த பருவத்தில் சூரியகாந்தி விதை மகசூல் ஒரு ஏக்கருக்கு 600 முதல் 700 கிலோ வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியகாந்தியின் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் குறைந்துள்ளதால் சந்தைக்கு வரும் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. 
வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம் சார்பில், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 13 வருடங்களாக நிலவிய சூரியகாந்தி விதைகள் விலையின் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகளின் படி, சூரியகாந்தி விதையின் பண்ணை விலை செப்டம்பர் 15 முதல் நவம்பர் மாதம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ.33-35 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்க பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: