Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை, :சமூக விஞ்ஞான பயிலரங்கின் முதலாம் ஆண்டு விழா மற்றும் எழுத்தாளர் ப.பா.ரமணி எழுதிய ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளியீட்டு விழா, கோவை ரயில் நிலையம் எதிரில் திவ்யோதயா அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்திய கலாசார நட்புறவுக் கழக பொதுச்செயலாளர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக விஞ்ஞான பயிலரங்க நிர்வாகி குணசேகர் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் டி.ஞானையா ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூலை வெளியிட, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொன்னீலன் பெற்றுக் கொண்டார். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் ப.பா.ரமணி பேசியதாவது:
தமிழகத்தில் பிறந்து பொதுவுடைமை இயக்கத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவர் பார்வதி கிருஷ்ணன். குமாரமங்கலம் ஜமீன் குடும்ப பின்னணி, சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயன் மகள், லண்டன் ஆக்ஸ்போர்டில் கற்ற கல்வி, பெற்ற பட்டம் ஆகியவற்றை துச்சமாக கருதி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டியவர் பார்வதி கிருஷ்ணன். மாணவர் இயக்க தலைவர், இந்திய நாடக மன்றத்தின் முதல் அமைப்பாளர், உலகறிந்த தொழிற்சங்க தலைவர், துணிச்சல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர், தனது கணவர் என்.கே.கிருஷ்ணன் உடன் கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்.
அனைத்திற்கும் மேல் சுயவிளம்பரத்தை விரும்பும் ஆர்ப்பாட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஓர் எளிமையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். இத்தகைய சிறப்புமிக்க பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்பாக ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் பார்வதி கிருஷ்ணனின் எளிமையான வாழ்க்கையை குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவர் வழி நடக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு ப.பா.ரமணி பேசினார். 
விழாவில், கவிஞர் புவியரசு, மூத்த வங்கி ஊழியர் சங்க தலைவர் ஜோசப், வடிவேலு, சுந்தரம், மவுனசாமி, சுப்ரமணியம், ராஜம், ரகுபதி, கோட்டியப்பன், ராம்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments: