Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
உடுமலை, :உடு மலை அமராவதி நகரில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க, வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ளது அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகள். இப்பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், அமராவதி வனச்சரகத்தையொட்டி இக்கிராமங்கள் உள்ளதால் வறட்சி காலங்களில் தண்ணீருக்காவும், உணவுக்காகவும் யானை கள், காட்டுப்பன்றி, செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் இப்பகுதிக்குள் நுழைவது உண்டு. 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சாயப்பட்டறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கடித்து கொன்ற சிறுத்தை, அமராவதி நகரில் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், அமராவதி வனச்சரகர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் அடுத்தடுத்து கொன்றது. சிறுத்தையின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர். 
எனவே தங்களின் உயிருக்கும், கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனச்சரகரின் வீடருகே மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிறுத்தையை பிடிப்பதற்காக வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் நேற்று மாலை கூண்டு ஒன்றை வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும் சுற்றித்திரியும் சிறுத்தையை வரவைப்பதற்காக அதில் ஒரு ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர். வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் மலைப்பகுதி அமைந்துள்ளதால் அங்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை சிக்குமா என வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

0 comments: