Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 62). கடந்த 2009–ம் ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தார். அவரை பார்த்துக்கொள்ளுமாறு பரமசிவத்திடம் சிறுமியின் உறவினர்கள் கூறிவிட்டு வேலைக்கு சென்றனர்.
அப்போது வீட்டில் சிறுமி டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, பரமசிவம் வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டார். பின்னர் அவர் சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் சிறுமியை மிரட்டினார். இதுபோல் அவர் சிறுமியை பல நாட்கள் கற்பழித்ததாக தெரிகிறது.
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்த பரமசிவம் கர்ப்பத்தை கலைக்க சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் கர்ப்பம் கலையவில்லை. இதனால் பயந்துபோன அவர் கருவை கலைக்க தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துக்கொண்டு சென்றார்.
அங்கு சிறுமியிடம் டாக்டர் விசாரணை செய்தபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர், சிறுமியின் பெற்றோரை அழைத்து நடந்தவற்றை கூறி, கருவை கலைத்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், அப்போதைய திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் பரிமளா ஆஜரானார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்துக்கு சிறுமியின் வீட்டில் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கற்பழித்த குற்றத்துக்காகவும், கருவை கலைத்த குற்றத்துக்காகவும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், வீட்டில் அடைத்து வைத்த குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் என்று மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வசந்தலீலா கூறினார்.
மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் பரமசிவத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments: