Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
உடுமலை, : கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி 2ம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. 
தற்போது, பருவமழை பொழிந்து அணைகள் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் முடிந்தது. இதை தொடர்ந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 60 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று காலை 9 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணை மதகுகளை திறந்து வைத்தார். 
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், பொள்ளாச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், செல்லமுத்து, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

0 comments: