Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சேத்துபட் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா(வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
குரோம்பேட்டையில் ரஞ்சிதா தங்கி இருந்தபோது பெங்களூர், நேரு ரோடு, கிட்டப்பா லே–அவுட் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி(25) என்பவர், தான் எல்லை பாதுகாப்பு படையில் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்ப்பதாகவும், ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்வதுதான் தனது லட்சியம் என்றும் கூறி ரஞ்சிதாவை திருமணம் செய்ய சம்மதம் கேட்டார்.

மேலும் உறவினர்கள் சிலரை சேத்துபட்டுக்கு அழைத்துச் சென்று பெண் கேட்டார். இதையடுத்து ரஞ்சிதாவின் உறவினர்கள் பெங்களூர் சென்று பார்த்தபோது அவர்கள் பேச்சு சரி இல்லாததால் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என கூறி வந்து விட்டனர்.
இதன் பின்னர் சென்னைக்கு வந்த கோவிந்தசாமி, பள்ளிக்கரணையில் உள்ள ரஞ்சிதா சித்தி ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று, கல்யாண பத்திரிகை அடித்து விட்டதாகவும், நல்ல சம்பளத்துடன் மாப்பிள்ளை இருப்பதால் உறவினர்கள் பொறாமையில் தன்னை வேண்டாம் என உங்களிடம் சொல்லி இருப்பதாகவும் கூறினார். மேலும் ரஞ்சிதாவின் சித்தி மகனுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனால் கோவிந்தசாமியின் பேச்சில் அவர்கள் மயங்கிவிட்டனர்.

இதன் பின்னர் ரஞ்சிதாவுடன் தங்குவதாக கூறி குரோம்பேட்டை நியூகாலனியில் தங்கினார். அவர்கள் கணவன்–மனைவி போல இருந்ததாக தெரிகிறது. அப்போது கோவிந்தசாமி கட்டாயப்படுத்தி ரஞ்சிதாவுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. ரஞ்சிதாவின் பணம் மற்றும் நகைகளை வாங்கி செலவு செய்து வந்தார்.
இது குறித்து ரஞ்சிதா கேட்டபோது அவரை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சிதாவின் சித்தியிடம் அவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 14–ந்தேதி குரோம்பேட்டையில் இருந்து கோவிந்தசாமி மாயமாகி விட்டார். இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் ரஞ்சிதா புகார் அளித்தார்.

அவரது உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்–இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார், பெங்களூரில் கோவிந்தசாமியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், தர்மபுரி அருகே உள்ள காட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும், எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி ரஞ்சிதாவிடம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து நகை, பணத்தை ‘அபேஸ்’ செய்ததும் தெரியவந்தது.
இதுபோல ஆதரவற்ற பெண்களை குறிவைப்பதே அவரின் வேலை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைதான கோவிந்தசாமியை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய அவரது பெற்றோர் மற்றும் தங்கையை போலீசார் தேடி வருகின்றனர்.

0 comments: