Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
சேலம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் பகுதியில் எஸ்.கே.கார்ஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தை தொழில் அதிபர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், அவரது மகன் எஸ்.கே. முருகானந்தமும் நடத்தி வருகிறார்கள். பைபாஸ் ரோடு முன்பகுதியில் கார் ஷோரூமும், பின் பகுதியில் கார் ஒர்க்ஷாப்பும் உள்ளது.
இங்கு காவலாளியாக பெரியசாமி (58), சின்னத்தம்பி, அர்த்தநாரி ஆகிய 3 பேர் பணியாற்றினர்.
நேற்று இரவு அர்த்தநாரி விடுமுறை என்பதால் வேலைக்கு வரவில்லை. மற்ற இரண்டு காவலாளிகளும் வந்து இருந்தனர். காவலாளி பெரியசாமி ஒர்க்ஷாப்பில் பணியில் இருந்தார். சின்னத் தம்பி ஷோரூம் முன்புறம் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு ஒர்க்ஷாப்புக்கு சென்ற சின்னத்தம்பி பெரியசாமியிடம் பேசி விட்டு ஷோரூம் முன்புறம் சென்று விட்டார்.
இன்று அதிகாலை 4–30 மணிக்கு மீண்டும் ஒர்க் ஷாப்பிற்கு போய் பார்த்த போது சின்னதம்பிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. ரத்த வெள்ளத்தில் பெரியசாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே இரும்பு ராடு, கத்தி, கார்களில் முன்புறம் வைக்கப்படும் ராடு ஆகியவை கிடந்தது. ஒர்க்ஷாப் முழுவதும் ரத்தக்கறை படிந்து இருந்தது.
இதுகுறித்து அவர் கார் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் தினகரன், பழனிச்சாமி, ராஜேந்திரன், அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் குமார் (அன்னதானப்பட்டி), பாரதி மோகன் (செவ்வாய்ப் பேட்டை), ரஜினிகாந்த் (நுண்ணறிவுப்பிரிவு) மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடி சீலநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
கார் உரிமையாளர் எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி ஒர்க்ஷாப்பில் உள்ள அலுவலகத்தில் பணத்தை சரி பார்த்தார். அப்போது ரூ. 9 லட்சம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இன்னொரு இடத்தில் டிராயரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் தப்பியது.
கொள்ளையர்கள் பணம் இருப்பது தெரிந்தே இங்கு வந்து காவலாளியை கொன்று விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஒர்க்ஷாப்பில் உள்ள சாவி காவலாளி வசம் இருந்து உள்ளது. இதை தெரிந்து கொண்ட கொள்ளைக் கும்பல் ஒர்க்ஷாப்பிற்குள் புகுந்து உள்ளது.
அவர்களை காவலாளி பெரியசாமி தடுத்து இருக்கிறார். இதனால் கத்தியால் குத்திய அந்தக்கும்பல் இரும்பு ராடால் அவரை தாக்கி இருக்கிறது.
ஆத்திரம் தணியாமல் காரின் முன்புறம் வைத்து இருக்கும் பைபர் கம்பியையும் எடுத்து ஓட ஓடவிரட்டி தாக்கி இருக்கிறார்கள். கொள்ளைக் கும்பலிடம் இருந்து உயிரை காப்பாற்ற அவர் தப்பி ஓடி இருக்கிறார். சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்தும் அவரை கொள்ளைக்கும்பல் விடவில்லை .அவரை ஓட, ஓட துரத்தி கொள்ளைக் கும்பல் கொன்று உள்ளது. இதில் சுவர் மற்றும் ஒர்க்ஷாப் முழுவதும் ரத்தக்கறை படிந்து உள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதல் 4–30 மணிக்குள் இந்தக் கொலையும், கொள்ளையும் நடந்து உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அலுவலகத்தையும், கார் ஷோரூமையும் கொள்ளைக் கும்பல் நோட்டமிட்டு இந்தக் கொலை–கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மோப்ப நாய் சீலநாயக்கன்பட்டி பை–பாஸ் பஸ் ஸ்டாப்பில் போய் நின்றதால் கொள்ளையர்கள் பஸ் அல்லது ஏதாவது வாகனத்தில் தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளது.
சேலத்தில் 24 மணி நேரமும் வாகன நடமாட்டம் உள்ள இடத்தில் கொலை–கொள்ளை நடந்து இருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட காவலாளி பெரியசாமி சேலம் தாதகாப்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 58 வயது ஆகிறது. இவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

0 comments: