Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி      கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏஸி' நிழற்கூடம் அமைக்கப்படுகிறது கரூர் மாவட்டத்தில், ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை பிரதானமாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினசரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு, பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். கரூர் சட்ட தொகுதியில், முக்கிய இடங்களில், பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்கூடங்களின் மேற்கூரை உடைந்துள்ளது. பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமல் போய் விட்டது. கரூர் சட்டசபை தொகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நிழற்கூடம், பழக்கடையாகவும், மண்மங்கலத்தில் உள்ள நிழற்கூடம் பயனற்றும், கலைக்கல்லூரி உள்ள நிழற்கூடம், குடிமகன்களின் இருப்பிடமாகவும் உள்ளது. கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்ட், மகாதானபுரம், மணவாசி ஆகிய இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிழற்கூடம் கிடையாது. குளித்தலையில் சுங்ககேட், மணப்பாறை, திருச்சி, கரூர் ஆகிய மார்க்கத்தில், மேட்டுமருதூர், பரளி, கோட்டையார் தோட்டம், பனிக்கம்பட்டி, கணேசபுரம், சிவாயம் உள்ளிட்ட இடங்களில் நிழற்கூடம் இல்லை. அய்யர்மலை, ஈச்சம்பட்டியில் உள்ள நிழற்கூடம், பயனற்று கிடக்கிறது. கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் பல லட்சம் செலவிட்டு கட்டப்பட்ட நிழற்கூடம் பயனற்று கிடக்கிறது. இந்நிலையில், கரூர் நகரில் உழவர்சந்தை, தான்தோணிமலை ஆகிய இடங்களில் தலா, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், "ஏஸி' நிழற்கூடம் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது. 24 லட்சம் மதிப்பில் கட்டப்படும் "ஏஸி' நிழற்கூடத்தால் யாருக்கு பயன் என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

0 comments: