Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் வாழ்க்கை

Author

செல்வன் 




அமெரிக்க விசாச் சிக்கல்கள் குறித்து, சென்ற வாரக் கட்டுரையில் அலசினோம். அதன்பின் இணையக் குழுக்களில் அது குறித்துப் பலத்த விவாதம் நடைபெற்றது. அதனால் என் நண்பர்கள், அறிந்தவர்களின் அனுபவங்களைத் தொகுத்து அளிப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுவதால் இப்பதிவு.
 
மாணவனாக இருந்த காலத்தில் அமெரிக்கா வந்ததால் எப்1 எனும் மாணவர் விசாவின் சிக்கல்கள் குறித்து அறிய முடிந்தது. இங்கே கல்லூரிகளில் இரட்டைக் கட்டண முறை அமலில் உண்டு. இதன்படி பல்கலைக்கழகம் இருக்கும் மாநிலங்களின் குடிமக்களுக்குக் குறைந்த கட்டணமும், வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிக கட்டணமும் உண்டு. இந்திய மாணவர்கள் இப்படி அதிக கட்டணம் கட்டும் சூழல் உருவானதுடன், அவர்கள் படிக்கும் காலத்தில் வெளியே பணிபுரிய தடையும் இருப்பதால் அவர்களுள் பலர் சட்ட விரோதமாக இந்திய உணவகம், இந்திய மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் (இவற்றில் பெரும்பாலானவை இந்தியர் நடத்துபவை) ஆகியவற்றில் பணியாற்றுவார்கள்.
 
இவையெல்லாம் சட்டப்பூர்வமான வேலை இல்லை என்பதால் இவர்களுக்குக் குறைந்த சம்பளமே வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஏழு டாலர் குறைந்தபட்ச கூலி என்றால் இவர்களுக்கு ஐந்து டாலர் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இதிலேயே எப்படியும் மாத வாடகை, உணவுச் செலவுகளை ஈடுகட்டிவிடுவார்கள். அவ்வப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள் ரெய்டு வரும் அபாயம் இருந்தாலும், பல மாணவர்கள் சட்ட விரோதமாக இதில் ஈடுபடுவதைக் காணலாம்.

 
அமெரிக்கப் பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் உள்ள சிக்கல் என்னவெனில் அங்கே அடிக்கடி கொள்ளை நடப்பதே. இரவில் காரில் துப்பாக்கியுடன் வந்து இறங்குவார்கள். எல்லாப் பெட்ரோல் பங்குகளிலும் உணவு, ஸ்னாக் விற்கும் கடைகள் இருக்கும். கல்லாவில் இருக்கும் நூறு, இருநூறு டாலரைக் கொடுத்தால் பேசாமல் போய்விடுவார்கள். எதிர்த்துச் சண்டை போட்டால் சுட்டுவிடுவார்கள். பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் இத்தகைய ரிஸ்க் இருப்பதால் அமெரிக்கர்கள் அதிகமாக இதைச் செய்வதில்லை. இந்திய மாணவர்கள் பலர் செய்கிறார்கள். அமெரிக்கப் பெட்ரோல் பங்குகள் பலவற்றையும் குஜராத்திகள், குறிப்பாகப் பட்டேல்கள் எடுத்து நடத்துவதைக் காணலாம்.
 
பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த, மிகப் பெரும் தொகை தேவைப்படும். ஊரில் எப்படியோ போலியாக வங்கி பேலன்ஸ், சொத்துக் கணக்கு எல்லாம் காட்டி விசா வாங்கிவிட்டாலும் இக்கட்டணத்தைச் செலுத்தப் பணம் இருக்காது. எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் இதற்குப் பயந்து வயதில் மூத்த அமெரிக்க பெண் ஒருவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். படிக்கும் காலம் முழுவதும் அவர் வீட்டில் தங்கி, அவருடன் காரில் போய், அவர் இவனது கல்விக் கட்டணம் அனைத்தையும் செலுத்தி, இவனது செலவுகளைப் பார்த்துக்கொண்டார். ஊருக்கு வருடம் ஒரு முறை கோடையில் போய்வரும் செலவையும் ஏற்றுக்கொண்டார். கடைசியில் டிகிரி முடித்து ஊருக்குப் போய் அம்மா, அப்பா பார்த்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு அதன்பின் அந்த அம்மையாருடன் எத்தொடர்பும் இல்லாமல் அவன் மறுபடி அமெரிக்காவில் வேறு ஊருக்குப் போய், செட்டிலாகிவிட்டான். அவனைத் தேடி அந்த அம்மையார் எங்கள் பலரையும் விசாரித்ததும் திட்டியதும் இன்னமும் நினைவில் உள்ளது.

0 comments: