Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
அவிநாசி : அவிநாசி அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை, தீயணைப்பு துறையினர் நேற்று உயிருடன் மீட்டனர்.
அவிநாசி ஐயப்பன் கோவில் அருகே கரண்ட்காரர் தோட்டத்தை சேர்ந்தவர், மாரப்பன். இவரது தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில், 12ம் தேதி காலை புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை வீரர்கள், நேற்று முன்தினம் மானை மீட்க முயற்சித்தனர். வலை விரித்தோ, அல்லது மயக்க மருந்து செலுத்தினால் மட்டுமே மானை பிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அதனால், உடுமலை வனச்சரகம் அமராவதியில் இருந்து, நேற்று வலை கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மோகன், ஜெகன் ஆகியோர், 70 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி, மான் மீது வலையை வீசினர். மற்ற வீரர்கள், வலையை மேலே இழுத்து, மானை காப்பாற்றினர்.
வனவர் முருகேசன் கூறுகையில்,""கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானுக்கு, இரண்டரை வயதிருக்கும். கிணற்றுக்குள் இருந்ததால், மிகவும் பயந்துள்ளது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட மான், சிகிச்சைக்குபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்படும்,'' என்றார்.
அப்பகுதியினர் கூறுகையில், "இரண்டு நாட்களாக, கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய மானை, தீயணைப்பு துறையினர் போராடி, பத்திரமாக மீட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.

0 comments: