Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : போலீஸ் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்த பெயின்டரின் சடலத்தை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த இலுப்பூரை சேர்ந்தவர் ரவி (40), பெயின்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் பூந்தமல்லி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரவி பெயின்ட் அடித்தார். அப்போது, அந்த வீட்டில் நடந்த கொலை பற்றி விசாரிக்க பூந்தமல்லி போலீசார் ரவியை கடந்த 12ம் தேதி காலை அழைத்து சென்றனர்.
அப்போது, கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் அவரை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் காலை மீண்டும் அவரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்தனர். இதனால், மனமுடைந்த ரவி, போலீசார் சித்ரவதையால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து இறந்தார். மணவாளநகர் போலீசார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே, ரவியின் மனைவி ராஜேஸ்வரி மணவாளநகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், என் கணவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மறுத்தால், உன் மனைவியை விபசார வழக்கில் கைது செய்வோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து ரவியின் உடலை மருத்துவர்கள் வழங்கியபோது, அங்கு திரண்ட உறவினர்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சடலத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த சப் கலெக்டர் வீரப்பன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உறவினர்கள் சடலத்தை பெற்று சென்றனர்.

0 comments: