Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
பரமத்தி வேலூர் அருகே குடும்பத்தகராறில் மகன், மகளுடன் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் முன்பு கிடந்த அவர்கள் 3 பேரின் பிணங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முனியப்பன் (வயது 35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி (28). இவர்களுக்கு நரேந்திரபிரசாத் (11) என்ற மகனும், கவுசிகா (10) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்வரி கொந்தளம் வெங்கமேடு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது முனியப்பன் தனது மகன் நரேந்திரபிரசாத் மற்றும் மகள் கவுசிகா ஆகியோருடன் நண்பரது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

பிணங்களாக கிடந்தனர்

இந்த நிலையில் மகேஷ்வரி தந்தை வீட்டில் இருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டினுள் அமைக்கப்பட்டு இருந்த தென்னை கீற்று வேலி அருகே மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்ததையும், அந்த மோட்டார் சைக்கிளுக்கு கீழ் தனது மகன் நரேந்திரபிரசாத், மகள் கவுசிகா மற்றும் கணவர் முனியப்பன் ஆகியோர் பிணமாக கிடந்ததையும் பார்த்து மகேஷ்வரி கதறி அழுதார்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெஸ்கி, பரமத்தி வேலூர் துணை சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விஷம் குடித்து தற்கொலை

பின்னர் இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி டிரைவர் முனியப்பன் தன் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: