Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
செந்துறை,
6 பெண்கள், குழந்தை உள்பட 8 பேரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது எப்படி என்பது பற்றி அந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒப்பந்தக்காரர்
செந்துறை அருகே உள்ள சேந்தமங்கலம் ஏரிக்கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியின் அருகில் உள்ள ஒரு சிமெண்டு ஆலையில் ஒப்பந்தக்காரராக இருந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களின் குழந்தைகள் மகாலட்சுமி, கீர்த்தனா, இன்பதமிழன். வேல்முருகன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோருடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேல்முருகனின் பெற்றோர் பெருமாள், மல்லிகா மற்றும் அவரது மகள் மகாலட்சுமி, மகன் இன்பத்தமிழன் ஆகியோர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று படுத்துக்கொண்டனர். வேல்முருகன், அவரது மனைவி பார்வதி, 1 வயது மகள் கீர்த்தனா ஆகியோர் குடிசை வீட்டில் தூங்கினார்கள்.
3 பேர் கொலை
மறுநாள் அதிகாலை வேல்முருகன் வீட்டிற்கு டிரைவர் விஜயகாந்த் டிராக்டரை எடுக்க சென்றார். அப்போது அங்கு வேல்முருகன் கோடாரியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் காயங்களுடன் குழந்தை கீர்த்தனா மயங்கி கிடந்தது. சிறிது தூரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மார்பில் சூலத்துடன் கூடிய சாமி சிலை ஒன்றும் கிடந்தது.
இதனைக்கண்ட விஜயகாந்த் அலறியடித்து கொண்டு ஓடி உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து மயங்கிய நிலையில் கிடந்த குழந்தை கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
5 தனிப்படை
இதே போல் அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. தனியார் அறவை ஆலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு 3 மகள்கள். இதில் ஒரு மகள் சரஸ்வதி (35) கணவரை பிரிந்து தாயுடன் குடிசை வீட்டில் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 29–ந் தேதியன்று இரவு வீட்டில் லட்சுமியும், சரஸ்வதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த 5 கொலைகள் தொடர்பாக துப்பு துலக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
வாக்குமூலம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பீடாக்கடை உரிமையாளர் செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி, பொருட்களை திருடிய வாலிபரை தம்மம்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்தரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்னக்கரை மகன் சுப்பராயன் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து சுப்பராயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாவது;–
நான் லாரி கிளீனராக வேலை பார்த்தேன். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் 2 நாட்களாக வேலை தேடி அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. சாப்பிடுவதற்கு பணம் இல்லாததால், சிமெண்டு ஆலை எதிரே இருந்த கோழிக்கடையில் உள்ளே புகுந்து ஒரு கோழியையும், கத்தியையும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். அதனை சுட்டு சாப்பிடலாம் என்று சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சேந்தமங்கலத்தில் தனியாக இருந்த வீட்டை பார்த்ததும் அதில் பணம், நகை கிடைக்கும் என்று உள்ளே சென்றேன்.
கோடாரியால் வெட்டினேன்
வீட்டிற்குள் சட்டையில் இருந்த 200 ரூபாய் மற்றும் வேல்முருகனின் செல்போனை எடுத்தேன். அப்போது பார்வதி எழுந்து எனது கையை பிடித்து விட்டார். அதனால் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து பார்வதியை வெட்டினேன். சத்தம் கேட்டு எழுந்த வேல்முருகனையும் வெட்டினேன். குழந்தை அழுது கொண்டு இருந்ததால் கோடாரியால் தாக்கினேன்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பார்வதியை கற்பழித்துவிட்டு, மேலும் பணம், நகைகள் உள்ளனவா என்று தேடி பார்த்துவிட்டு, அங்கே நிறுத்தி இருந்த வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றேன்.
பணம் கொள்ளை
அப்போது செந்துறை போலீசார் இரவு ரோந்தின் போது வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து பொன்பரப்பி சென்ற போது பெட்ரோல் தீர்ந்து விட்டதால் முந்திரி காட்டிலேயே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டேன். இதேபோன்று கயர்லாபாத்தில் தனியாக இருந்த தாய், மகளை கொன்றுவிட்டு அதில் சரஸ்வதியை கற்பழித்துவிட்டு அவர்கள் வைத்து இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருச்சி கல்லக்குடியில் ஜெயமேலு (82) என்ற மூதாட்டியையும், 2012–ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் பத்திரகவுண்டம்பாளையத்தில் பணம் தரமறுத்த தனது பாட்டியையும் கொலை செய்ததையும், தம்மம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்கல் குவாரியில் கிளீனராக வேலை பார்த்தபோது அங்கு வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணையும் கொடூரமாக கற்பழித்து கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 500–ஐ கொள்ளையடித்ததையும் சுப்பராயன் ஒப்புக்கொண்டார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அரியலூர், திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் சுப்பராயனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காமக்கொடூரன் ஜெய்சங்கர் போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருவனே இத்தனை கொலைகளை தடயமில்லாமல் செய்து இருப்பது போலீசாரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: