Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வருவதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. 
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:  
தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விற்பனை செய்வதில்லை. தனியார் நிறுவனங்களுக்குதான் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பாலுக்கு விலையை உயர்த்தி வழங்கியபோதும், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் தோட்டங்களுக்கே வந்து பாலை வாங்கிச் செல்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களைப்போல கடுமையான விதிகள் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் பணம் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைள் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறைந்து வருவதால், ஆவின் நிறுவனத்திற்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் தனியார் பால் நிறுவனங்களை கொள்முதல் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். 
அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒரு சில பகுதிகளில் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் மட்டும்தான் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆளும் கட்சியினரைக் கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு லாபம் அதிகம் கிடைக்கிறதோ, அங்குதான் பாலை விற்பனை செய்ய முடியும் எனவே அதிகாரிகளின் இந்த அராஜகபோக்கை கண்டித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

0 comments: