Wednesday, December 10, 2014

On Wednesday, December 10, 2014 by farook press in ,    
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழுக் கூட்டம் என்.சுப்பிரமணியம் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், என்.கோபாலகிருஷ்ணன், ஒன்றியக்குழுச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம், தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி இடத்தை கையகப்படுத்தி உள்ளது. தொடர்ந்து விரிவடைந்து வரும் திருப்பூர் மாநகரின் தெற்கு பகுதியில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய, சாமானிய வீட்டு மாணாக்கர்கள் தான் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது இந்த இடத்தை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்திருப்பதால் பள்ளிக்கு உரிய விளையாட்டு மைதானம் பறிபோவதுடன், எதிர்காலத்தில் இப்பள்ளியின் விரிவாக்கமும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வட்டாரத்து மாணவர்கள் தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் படிப்பதற்கு இங்கிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கோ அல்லது பெருந்தொழுவு, கொடுவாய் அரசுப் பள்ளிகளுக்கோ போக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த பள்ளிக்கூடம் இருக்கக்கூடிய அரசு புறம்போக்கு இடம், கடந்த காலத்தில் கேட்பாரற்று கிடந்தது. எனவே தனியார் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதை எதிர்த்து இந்த பகுதி பொது மக்கள் உறுதியாக போராடியதன் விளைவாக தனியார் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டு பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டது. எனவே பொது மக்கள் மீட்டுக் கொடுத்த இடத்தை அரசு நிர்வாகம் கையகப்படுத்துவது நியாயமானதல்ல. அரசு நிர்வாகம் இப்பள்ளியின் சீரிய செயல்பாட்டை தடுப்பதன் மூலம் அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி குழந்தைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அருகமைப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் காற்றில் பறக்கவிடுகிறது.
எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கே.செட்டிபாளையம் அரசுப் பள்ளி இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், வேறு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கட்ட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

0 comments: