Thursday, April 02, 2015

On Thursday, April 02, 2015 by Unknown in ,    
விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் குற்றங்கள் குறையும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.
 மதுரை மாநகர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட நேரமின்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பு, தொலைக்காட்சி பார்த்தல் என இருப்பதால் விளையாட நேரம் கிடைப்பதில்லை. பெரியவர்கள் வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடிவதில்லை.
 வியாபாரம், விளையாட்டு, சமூகசேவை என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் வாழ்வு சிறப்பாக இருக்கும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் குற்றங்களும் குறையும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கு விளையாட்டு  சிறந்த பாலமாக இருக்கிறது. தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது என்றார்.
 மதுரை மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா வாழ்த்திப் பேசுகையில், நாட்டிலேயே விளையாட்டுக்கு அதிக நிதி அளித்திருப்பது தமிழக அரசுதான். மாநிலத்தில் 24 விளையாட்டு விடுதிகள் மூலம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது. விளையாட்டை மேம்படுத்தினால் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.
 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்தில் (ஆண்கள் பிரிவு) போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரியும் முதலிடம் வகித்தன. கபடியில் ஆண்கள் பிரிவில் கலாசிமிண்ட், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவை முதலிடம் பெற்றன.
 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் காசிமாயனும், 400 மீட்டரில் அதே கல்லூரி மாணவர் இளமுருகுவும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி கார்த்திகாவும் முதலிடம் வகித்தனர்.
 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சேத்தனா பள்ளி மாணவர் சசிகுமாரும், பெண்கள் பிரிவில் அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.பிரியாவும் முதலிடம் வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் மாநகர்  காவல் துறை அணியை ஊர்க்காவல்படை அணியினர் வென்றனர்.
  பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநகர் துணை ஆணையர் ராஜராஜன் (தலைமையிடம்) வரவேற்றார். காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பரிசுகளை வழங்கினார். துணை ஆணையர் (குற்றப்பிரிவு) உமையாள் வாழ்த்திப் பேசினார். ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments: