Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
"யெஸ்' வங்கி என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து, கடந்த 2004 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறது.
இதே பெயரில் "ஏபிஎஸ்' என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக் கொண்டு, "யெஸ் ஏபிஎஸ் வங்கி' என்ற பெயரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி எதிரே நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வங்கிக் கிளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த "யெஸ்' வங்கியின் சேலம் கிளை மேலாளரும், துணைத் தலைவருமான ஜி.எஸ். சசிக்குமார் என்பவர் கடந்த மாதம் இங்கு வந்து வங்கிக் கிளையைப் பார்வையிட்டுள்ளார்.
அப்போது, தங்களது வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி வசூலித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.கங்காதரிடம் சசிக்குமார் புகார் அளித்தார். மாவட்டக் குற்றப் பிரிவுக்கு இந்தப் புகார் மாற்றப்பட்டது. குற்றப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு, திங்கள்கிழமை 4 பேரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி சந்திரசேகரன் அளித்த பேட்டி:
"யெஸ்' வங்கியில் "வங்கித் தொடர்பாளர்' என்ற பெயரில் முகவரைப் போன்ற பணிக்கு சோமசுந்தரம் பயிற்சி பெற்று, அதற்கான சிறிய தொகையை வைப்பு நிதியாகவும் "யெஸ்' வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பெயரில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து, ஒரு போலி வங்கியை உருவாக்கியிருக்கிறார். அதற்காக எல்லா வகையான ஆவணங்களையும் அச்சிட்டு, வங்கிக் கிளைக்கான உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்குள் 83 வாடிக்கையாளர்களைச் சேர்த்து ரூ. 1.60 லட்சம் வசூலித்துள்ளனர்.
ஒரு மாதத்துக்குள் மாட்டிக் கொண்டதால், பெரிய தொகை வசூலிக்க முடியவில்லை. "யெஸ்' வங்கியிலிருந்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, சில வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த வீ.சோமசுந்தரம் (31), பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஜெ.பாலாஜி (24), நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த ஜெ. சுந்தரேசன் (22), இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதே வழக்கு தொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயபிரபுவைத் தேடி வருகிறோம். இவர்கள் மீது 120 பி, 465, 468, 471, 482, 489, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.

 

சேலம், நாமக்கல்லில் வங்கிக் கிளைகள்?

போலியான இதே வங்கிப் பெயரில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இவர்கள் கிளைகளை அமைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில்தான் எல்லாமும் வெளியே வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். புனைவாக தயார் செய்யப்பட்ட இந்த வங்கிக்கு சோமசுந்தரம் தலைமைச் செயல் அலுவலராகவும், பாலாஜி விற்பனைப் பிரிவுப் பணியாளராகவும் இருந்துள்ளனர்.

0 comments: