Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : சென்னையில் நகை, பணத்துக்காக முதியவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை தவிர்க்கவும், குழந்தை கடத்தலை தடுக்கவும் போலீசார் சில ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சென்னையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த கமிஷனர் ஜார்ஜ் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
தனிப்படையினர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாரை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணி செய்து வருகின்றனர். இருப்பினும் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், வீதியில் செல்லும் வயதானவர்கள் நகை பணத்துக்காக கொலை செய்யப்படும் கொடூர சம்பவங்கள் தொடர் கதையாகிறது.
சில மாதங்களுக்கு முன் மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவில் வசித்த மூதாட்டி சகோதரிகள் ஜெயலட்சுமி (70), காமாட்சி (65) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். நகை, பணத்துக்காக வீட்டு வேலைக்காரியே 6 பேருடன் வந்து கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 
முகப்பேர் மேற்கு ஏரிக்கரையை சேர்ந்த டாக்டர் மல்லிகா, நகை, பணத்துக்காக கார் டிரைவரால் கொலை செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் அவரது சடலம் வீசப்பட்டது. 
எழும்பூர் அடுக்குமாடியில் குடியிருந்து வந்த உளவியல் பெண் நிபுணர் எம்மா (82) என்பவரும் நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.
ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் தெருவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற வங்கி பெண் அதிகாரி மெகருன்னிசா (57), அவரது உறவினரால் கொலை செய்யப்பட்டு நகை, பணம் அபேஸ் செய்யப்பட்டது. 
சில தினங்களுக்கு முன்னர் ஜாபர்கான் பேட்டை குடியிருப்பில் வசித்து வந்த எல்ஐசி பெண் ஏஜென்ட் விசாலாட்சி (63)யும் நகை, பணத்துக்காகவே கொலை செய்யப்பட்டார். 
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் தெரிந்தவர்களால், உறவினர்களால் தனியாக இருக்கும்போது கொல்லப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் புதிதாக வந்து கொலை செய்யவில்லை. எனவே, வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து போலீசார் அவர்களுக்கு சில ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன் விவரம்: 
* வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் தங்கள் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத் துக்கு தெரியப்படுத்துங்கள். இது ரோந்து போலீ சார் உங்களை கண்காணிக்க உதவியாக இருக்கும்.
* வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர்களின் பின்னணியை முழுமையாக விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட வர்கள் மேல் ஏதாவது சந்தேகம் இருந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்கள் விசாரணையை தொடர்வார்கள்.
* வீட்டில் இருக்கும் நகை, பணம் பற்றிய தகவல்களை குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
* வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மிகவும் நல்லது.
* ரோந்து போலீசார் தங்கள் பகுதிக்கு சரியாக பணி செய்ய வருகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். ரோந்து பணிக்கு யாரும் வரவில்லை என்றால் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள்.
* தெரியாத மற்றும் புதிய நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.
* யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுங்கள். 
* பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் சில ஆலோசனைகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஒரு ரகசிய எண் அல்லது குறியீட்டை சொல்லி கொடுங்கள். நீங்கள் செல்ல முடியாத பட்சத்தில் உங்களால் அனுப்பப்பட்டவர்களுக்கு ரகசிய எண்ணை சொல்லி அனுப்புங்கள். யாராவது கடத்தும் நோக்கத்துடன் உங்கள் குழந்தையிடம் சென்றால் ரகசிய குறியீடு தெரியாமல் தவிப்பார்கள். இதனால், குழந்தை தப்பித்து விடும். குற்றவாளியும் அடையாளம் காணப்படுவார் என்று போலீசார் யோசனை வழங்கி உள்ளனர்.

0 comments: