Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
குரோம்பேட்டை, : பல்லாவரம் நகராட்சி 21வது வார்டு பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் நகராட்சிக்கு முறைப்படி பணம் கட்டாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டிருப்பதாக நகராட்சிக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து, பல்லாவரம் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பொறியாளர் சீனிவாசன் தலைமையில் 21வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர்.
அப்போது நேதாஜி நகர், மாணிக்கம் நகர் பகுதிகளில் 51 இணைப்புகள் நகராட்சியில் பணம் கட்டாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுபோல், நேதாஜி நகரில் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் 18 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து துண்டித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இணைப்பு எடுத்தவர்கள் பணம் கட்டியதாக கூறினர். ஆனால், நகராட்சியில் பணம் கட்டப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதி பா.ஜ கவுன்சிலர் வைரம் சீனிவாசன், அப்பகுதியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாக இணைப்புகள் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நகராட்சி சார்பில் சிட்லப்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், குரோம்பேட்டை நேதாஜி நகர் மெயின்ரோட்டை சேர்ந்த விஜயகுமார் (42) என்பவர் சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதில், பா.ஜ கவுன்சிலர் வைரம் சீனிவாசனிடம் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற ரூ.13 ஆயிரம் முதல் தவணையாக கொடுத்ததாகவும், இணைப்பு பெற்றபின் நகராட்சியால் அது துண்டிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் நகராட்சியில் பணம் கட்டாமல் முறைகேடாக இணைப்பு கொடுத்து எங்களிடம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதுபோல மேலும் 9 பேர் சேர்ந்து புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிட்லப்பாக்கம் போலீசார் 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கவுன்சிலர் வைரம் சீனிவாசனை போலீசார் தேடினர். அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் தேடி வருகின்றனர். 
பொது மக்களிடம் பணம் வாங்கி திருட்டுத்தனமாக குடிநீர், பாதாள சாக்கடை இணைப்¢பு வழங்கி பாஜ கவுன்சிலர் மோசடி செய்த சம்பவம் குரோம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு முறையாக அனுமதி பெற்று வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்துகொள்ள வேண்டும். இன்னும் பல வார்டுகளில் திருட்டு இணைப்புகள் பற்றி ரகசியமாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனறனர்.

பல வார்டுகளில்
திருட்டுத்தனமாக இணைப்பு?
பல்லாவரம் நகராட்சி 21வது வார்டில் மட்டுமின்றி நகராட்சியின் பல வார்டுகளை அனுமதியின்றி கவுன்சிலர்கள் பலர் திருட்டுத்தனமான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கியுள்ளனர். ஆனால், பாஜ உறுப்பினர் வார்டில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒருதலைப்பட்சமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 comments: