Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாரூரில் கியாஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் மேட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனம், திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள வீடு, கடைகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. இதில் வீடுகளில் உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டர்களை இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் கியாஸ் சிலிண்டர்கள் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் நேற்று கியாஸ் ஏஜென்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கியாஸ் ஏஜென்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் பதிவு செய்தவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என போலீசாரிடம் தனியார் கியாஸ் ஏஜென்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர் வரதராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

30-ந் தேதிக்குள்....

இணையதளத்தில் கியாஸ் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த முறை சரிவர கடைப்பிடிக்கப்படுவது இல்லை. மேலும் சிலிண்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. பதிவு செய்து மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் ஆகஸ்டு மாதம் வரை பதிவு செய்தவர்களுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சிலிண்டர் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதற்குள் சிலிண்டர்களை வினியோகம் செய்யாவிட்டால் மீண்டும் கியாஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: