Thursday, October 02, 2014

On Thursday, October 02, 2014 by farook press in ,    
திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது
இந்துக்களின் வழிபாடுகளுள் நவராத்திரி விழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவசைக்கு பின் தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் 9–வது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அன்று வீடுகளில் மாணவ–மாணவிகள் தங்கள் பாட புத்தகங்களையும், அலுவலகங்களில் அலுவலக கோப்புகளையும் சரஸ்வதி தேவி படத்தின் முன் வைத்து ஏடு அடுக்கி வழிபாடுவார்கள்.
இதுபோல் தொழிற்சாலைகளில் ஆண்டு முழுவதும் லாபத்தை ஈட்டித்தரும் எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டு ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, தொழிற்சாலைகள் நிறைந்த பனியன் தொழில் நகரமான திருப்பூர் நகரம் களை கட்டி உள்ளது
தொழிற்சாலைகளில் பூஜை செய்ய தேவையான வாழைமரம், கரும்பு, மாவிலை செயற்கை அலங்கார பூக்கள், தேங்காய், பொரிகடலை, பழவகைகள், பூக்கள் என்று அனைத்து பொருட்களும் திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. போதிய அளவு மழை இல்லாததாலும், தண்ணீர் வசதி குறைந்து விட்டதாலும் வாழை மரம், கரும்பு, தேங்காய், பூ ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகமாகவே இருந்தது.
இது குறித்து வியாபாரிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:–
பெருந்துறையில் இருந்து வாழை மர கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். உற்பத்தி குறைந்து விட்டதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதி அளவு வாழை மரங்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தது. அதுவும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு விலை கொடுத்து தோட்டத்தில் இருந்து வெட்டி கொண்டு வந்துள்ளோம். சிறிய மரம் ஒரு ஜோடி ரூ.15–க்கும், பெரிய மரம் ரூ.20–க்கும் விற்பனை செய்கிறோம். இதே விலைக்கு அனைத்து மரங்களும் விற்று விட்டால் லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும். கரும்பை பொறுத்தவரை மதுரை மேலூர் பகுதியில் இருந்து மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல தரமான கரும்பு இல்லை. இருந்தாலும் ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கிறோம். இப்படி விற்றாலும் எங்களுக்கு லாபம் கிடைக்காது.
பூக்களை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 5 டன் பூக்கள் குறைந்து, 10 டன் வரை மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகமாகி விட்டது. 1 கிலோ மல்லிகைப்பூ, முல்லைபூ ரூ.640–க்கும், செவ்வந்தி, அரளி ரூ.240–க்கும், சம்பங்கி ரூ.200–க்கும், பட்டுப்பூ, செண்டுமல்லி ரூ.100–க்கும் விற்பனை செய்கிறோம். பூ எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை போன்றவற்றின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. மொத்தத்தில் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டது.வியாபாரிகள் தெரிவித்தனர்.

0 comments: