Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by farook press in ,    
திருப்பூரில் அடிக்கடி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏழு பாலங்களை உயர்த்திக் கட்ட வலியுறுத்தி​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள வெள்ளியங்காடு வட்டாரத்தில் நாவிதன் தோட்டம், கணேஷ்நகர், வெள்ளியங்காடு முதல் வீதி, வெள்ளியங்காடு 2வது வீதி, வெள்ளியங்காடு 3வது வீதி, முத்தையன் நகர், முத்தையன் கோயில் மெயின் ரோடு ஆகிய பகுதிகளை இணைக்கக் கூடிய பாலங்கள் மழைக் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போதும், கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது இந்த பாலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மேற்கண்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவுகளைப் போல் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பாலங்கள் உடைந்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மிகப்பெரும் சேதம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த பகுதிகளை இணைக்கும் பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பாலங்களை உயர்த்திக் கட்டுவதை விட்டு விட்டு தற்காலிக மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன. எனவே பல்லாயிரம் மக்கள் வசிக்கும் மேற்கண்ட பகுதிகளில் இணைப்புப் பாலங்களை உயர்த்திக் கட்ட தமிழக அரசும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று (நவ.23) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் வெள்ளியங்காடு பகுதி கிளைகளின் செயலாளர்கள் கே.பொம்முதுரை, சந்திரசேகர், மாரிமுத்து மற்றும் தென்னம்பாளையம் கிளைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஏறத்தாழ நாற்பது பேர் பங்கேற்று வீடு, வீடாக மக்களைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறி கையெழுத்துப் பெற்றனர். இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தனர். 
மக்களிடம் கையெழுத்துப் பெற்ற படிவங்களை தொகுத்து அரசுக்கு அனுப்பவும், இனியும் நடவடிக்கை எடுக்காமல் அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தினால் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.  வெள்ளியங்காடு பகுதியில் பாலங்களை உயர்த்திக் கட்ட வலியுறுத்தி பொது மக்களிடம் ஞாயிறன்று கையெழுத்துப் பெறும் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

0 comments: