மின் கட்டணத்தை நுகர்வோர் முன் பணமாக செலுத்தினால் 6 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மின் வாரியம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்திலும், கடனிலும் சிக்கியுள்ளது. படிப்படியாக நிதி சீரமைப்பு மற்றும் மின்சார உற்பத்தி, விநியோக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் கூடுதலாக நிதி அளித்து மின் வாரிய இயக்கத்துக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையில், மின்சார நிதி நிலையை மேம்படுத்தவும், நுகர்வோரின் காத்திருப்பைத் தவிர்க்கவும், மின் பயன்பாட்டுக் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது.
இதில் தற்போது புதிய அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் பயன்பாட்டுக்கான உத்தேச மின் கட்டணத்தை முன் கூட்டியே (அட்வான்ஸ்) செலுத்தினால், அந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வீதம், ஒரு மாதத்துக்குக் கணக்கிட்டு வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மின் இணைப்பு வைப்புத் தொகைக்கு, மின் வாரியம் ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டி வழங்கும் திட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது