Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஐதராபாத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கடந்த 5 நாள்களாக பெய்து வரும் பலத்த மழைக்கு 13 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஐதராபாத் மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளோம்’’ என்றார். பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களாக, சில சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றச் செய்துள்ளன. சில நிறுவனங்கள் விடுமுறை அளித்தன.  

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில், 3 பெண்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் சந்திரசேகரராவ், உடனடியாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழை காரணமாக நிலக்கரி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ராஜிவ் சர்மா தெரிவித்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் 45,840 ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழைக்கு விசாகப்பட்டினம் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் 9 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 5 நாட்களுக்கு தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பையிலும்கனமழை

மும்பையிலும் தொடர்ந்து 6 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை இடைவிடாமல் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். பலத்த மழை பெய்து வருவதால் அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

0 comments: