Sunday, April 23, 2017

On Sunday, April 23, 2017 by Unknown in    




திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வறட்சி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார், கலெக்டர் எஸ்.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வறட்சி குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
தமிழகத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் வறட்சியான சூழல் நிலவி வருகிறது. இதை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீரை எந்தவித தங்குதடையுமின்றி கிடைக்க துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
லாரிகள் மூலம் தண்ணீர்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ள பகுதிகளை கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்தவும், தேவையான இடங்களில் மின்மோட்டார்களை உடனடியாக பொருத்தி குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
கிராமப்புற பகுதிகளில் குடிநீர் ஆதாரம் இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பொது நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும். குடிநீர் தேவை உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சில பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும், மின்மோட்டார் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மின் இணைப்புகள் கொடுப்பதில் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்.
வறட்சி நிவாரணம்
மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 78 ஆயிரத்து 244 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. சிலருக்கு வறட்சி நிவாரணத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் முழுமையாக சேரவில்லை என்று புகார் வருகிறது. அந்தந்த தாசில்தார்கள், கிராம நிர்வாக அதிகாரி உதவியுடன் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைத்துவிட்டதா? என்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மக்காச்சோள தீவனம்
கூட்டத்தில், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சி எஸ்.அம்மாபாளையத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு ‘ஹைட்ரோபோலிக்’ முறையில் கால்நடைகளுக்கு மக்காச்சோள தீவனங்கள் வளர்ப்பதற்கான உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி மகேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), தனியரசு (காங்கேயம்), காளிமுத்து (தாராபுரம்), மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) மைக்கேல், உதவி கலெக்டர்கள் ஷ்ரவன்குமார் (திருப்பூர்), கிரேஸ்பட்சுவா (தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், அனைத்து தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார் பேசும்போது, ‘தண்ணீர் வற்றிய ஆழ்குழாய் கிணறுகளை மூடி போட்டு மூட வேண்டும். தண்ணீர் ஆதாரம் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் திட்டத்துடன் இணைக்க வேண்டும். அதன்மூலம் மழை பெய்யும்போது, கிடைக்கும் நீரை நிலத்தடியில் சேமிக்க வசதியாக இருக்கும். அதுபோல் பொது கிணறுகளையும் மழைநீர் சேகரிக்கும் திட்டத்துடன் இணைக்க வேண்டும். கோடை காலத்தில் கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தயாராக வைக்க வேண்டும். அதுபோல் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்’ என்றார்

0 comments: