Showing posts with label Tiruppur. Show all posts
Showing posts with label Tiruppur. Show all posts

Thursday, April 23, 2020

On Thursday, April 23, 2020 by Tamilnewstv in ,    
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது?

24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்தால் முழுமையாக வங்கியில்பணம் கட்டியிருக்க வேண்டும்
ஊரடங்கு உத்தரவில் கள்ளதனமாக மதுபானங்கள் விற்றதில் ஒரு கடைக்கு 1000 ஆயிரம் பல லட்சம் விற்றபனையில் வித்தியாசம் ஏன்?

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது 24.3.2020 .ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு காரணமாக கடைகள் 6 மணிக்கு மூடப்பட்டதால் டாஸ்மாக் மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது விற்பனையான பணம் அதற்கு அடுத்த நாள் வங்கிகள் 25 தேதி தெலுங்கு வருட பிறப்பு வங்கிகள் விடுமுறை. அதற்கு மறுநாள் 26 ஆம் தேதி வங்கியில் பணம் கட்டினார்கள். ஆனால் மதுபானங்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு டாஸ்மாக் மதுபானங்களை திருச்சியில் உள்ள திருச்சி துவாக்குடி மதுபான குடோன்.. கலையரங்கம் தியேட்டர்.,தேவர்ஹால். முசிறி டி என் சி குடோன் . மணப்பாறையில் உள்ள கல்யாண மண்டபம். திருச்சி உள்ள சுமார் 174 கடைகளை சரக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளது .அரசே மதுபானங்களை எடுத்து வருவதற்காக  ஒப்பந்த ஊர்தி எடுத்து வருவதற்கு அரசாங்கம் வாடகை தரவில்லையாம் தமிழகம் முழுவதும் பணியாளர்களே வாடகை கொடுத்து இருக்கிறார்கள் வாடகை என்பது வண்டி வாடகை மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கு ஒரு கூலி இறக்குவதற்கு ஒரு கூலி அனைத்தையும் பணியாளர்களை கொடுத்திருக்கிறார்கள் அரசாங்கம் இதுவரை வண்டி வாடகை தரவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாடகை என்பது முதன்முதலாக சரக்கு எடுத்த கடைகளுக்கு 25 ரூபாய் என்றும் அதன் பிறகு எடுத்த கடைகளுக்கு 20 ரூபாய் என்றும்  கடைகளில் டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களே முடிவு செய்து  டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர்   இந்த தவறை திருச்சி மாவட்ட மேலாளரிடம் எடுத்து சொல்லியும் எந்த பலனும் இல்லை டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களிடம் இடமிருந்து கமிஷன் பெறுகிறார் திருச்சி மாவட்ட மேலாளர். வாடகை ஒப்பந்த வண்டியின் சூப்பர்வைசர் இஸ்மாயில்  என்பவர் இவர் ஆளும் கட்சிக்கு உடன் தொடர்பு உடையவர் இவரை திருச்சி மாவட்ட மேலாளர்  பகைத்துக்கொள்ள மாட்டாராம் இவருக்கு அலுவலகத்தில் உள்ள டெம்போ மேனேஜர் ஜெயப்பிரகாஷ் (தாசில்தார்) மற்றும் அலுவலக பணியாளர் தியாகராஜன் சரக்கு பில் அடிப்பவர் டாஸ்மார்க் கடை  சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ, இவர்கள் இஸ்மாயிலுக்கு  உடந்தை ஆதலால் பணியாளர்களை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறாராம் இந்த இஸ்மாயில் பணியாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் எந்த கடைக்கு எவ்வளவு சரக்கு வேண்டும் என்பது நிர்ணயம் செய்வது டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர் ஜெயப்பிரகாஷ் இஸ்மாயிலும் மற்றும் சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ் மனைவியும் சேர்ந்து மதுபான பெட்டியின் கணக்கு எண்ணிக்கையை வீட்டில் பில் அடிப்பார்களாம் அப்படிப் பில் அடிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையாம். இதை யாரும் கேட்க முடியாது ஊழல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது? சரக்குகளை மாற்று இடத்துக்கு கொண்டு வரும்பொழுது தணிக்கை(auditing) செய்கிறார்கள் தணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் சுமார் 1000 ஆயிரத்திலிருந்து பல லட்சம் வரை  வித்தியாசம் வருகிறது துறையூருக்கு அருகில் உள்ள ஆதனூர் கடையில் சரக்குகளே இல்லை அனைத்தும் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளன.

   இது அனைத்தும் மாவட்ட மேலாளர் வெளியிடவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை ?

பணியாளர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு தவறு செய்யும் நபர்களை பாதுகாத்து வருகிறார் அதன் படி  அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கிறார்களா? பார் எடுக்கும் அரசியல்வாதிகள் தான் பணியாளர்களை மிரட்டுகிறார்களாம்

திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சரக்கு வெளியில் வர காரணம் மாவட்ட மேலாளர் வண்டி வாடகை தராததால் பணியாளர்களே வண்டிக்கு வாடகை தருவதற்கு சரக்குகளை பணியாளர்களே
 வெளியே மதுபானங்களைவிற்கிறார்களாம்  காவலுக்கு வரும் காவல்துறையினரும் சரக்குகளை வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படிப்பட்ட அவல நிலையில் பணியாளர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயமாக உள்ளது. சரக்குகளைப் பாதுகாப்பதற்கு பணியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இப்படி சரக்குகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனவில் இறந்தாலும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டாலும் மன அழுத்தத்தால் இயற்கையாக இறந்தாலும் பணியாளர்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் உள்ளது இப்படி நிலை நீடித்தால் வருங்காலத்தில் என்ன தான் தீர்வு?


சமீபத்தில் திருச்சி கலையரங்கத்தில்  மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் இருந்து மதுபானங்களை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது . இந்த மதுபானங்களை சூப்பர்வைசர்கள் சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை எடுத்து வந்து மது அருந்தி உள்ளனர் இந்த விஷயம் மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 இவர்கள் எந்த இடத்தில் 8 பேரும்  மது அருந்தி உள்ளனர் என்றும் அருந்திய பிராண்டும் மேலாலருக்கு  தெரியுமாம்.

ஆனால் அவர்களை எச்சரித்து மட்டும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது உள்ளே பேரம் பேசப் பட்டதா என்று தெரியவில்லை? சில பத்திரிக்கை ஊடகவியாளர்கள் அந்த எட்டு பேர் சரக்கு அடிப்பதை  போட்டோ வீடியோ எடுத்து வைத்து பேரம் பேசப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த சூப்பர்வைசர் மன உளைச்சலில் மாரடைப்பினால் இறந்துள்ளார்  உண்மை என்ன நடந்தது என்ற விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்

இப்படி ஊழல் செய்தவர்களை அழைத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தான்  உண்மை வெளிவரும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மணப்பாறை தாலுகா உள்ள ஒரு கடையில் இருப்பு சரி பார்த்ததில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பதும் மேலும் திருச்சி துவாக்குடி ஒரு பகுதியில் உள்ள கடையில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது?


Thursday, May 18, 2017

On Thursday, May 18, 2017 by Unknown in    

புதுடெல்லி

2017 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதற்கு முந்தைய நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

கர்ப்பிணிகளுக்கு உதவி

அப்போது அவர், “நாட்டில் உள்ள 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி கர்ப்பிணி பெண்களின் ஆஸ்பத்திரி செலவு, தடுப்பூசி, ஊட்டச்சத்துணவு ஆகியவற்றுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த நிதி உதவி திட்டமானது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் உயிர் இழக்கும் அவலத்தை பெரிதும் குறைத்துவிடும்” என குறிப்பிட்டார்.

சோதனை ரீதியில் 53 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. அந்த மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

நாடு முழுவதும் அமல்

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய எரிசக்தித்துறை மந்திரி பியுஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

ரூ.6 ஆயிரம் உதவித்தொகை

இந்த திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். இதில் ரூ.5 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் தரப்படும்.

ரொக்கமாக வழங்கப்படுகிற இந்த தொகை, கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு செல்லாததால் ஏற்பட்ட கூலி இழப்பை சரிக்கட்டுவதாகவும் அமையும். எனவே பிரசவத்துக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படவும் மாட்டார்கள்.

இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி நாட்டு மக்களுக்கு அறிவித்த திட்டம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இந்த மகப்பேறு உதவி திட்டம் 2017-ம் ஆண்டு, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அந்த நாள் முதல், 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த திட்ட செலவினம் ரூ.12 ஆயிரத்து 661 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7 ஆயிரத்து 932 கோடி.

* முதல் குழந்தைக்கு மட்டும்தான் செயல்படுத்தப்படும்.

* இந்த திட்டத்தின் பலனை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் தவிர்த்து அனைத்து பெண்களும் பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள்.

* கர்ப்பத்தை பதிவு செய்தவுடன் ரூ.1,000, 6 மாதங்களுக்கு பிறகு முதல் கர்ப்ப கால பரிசோதனை செய்த பின்னர் ரூ.2 ஆயிரம், குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசிகள் போடுகிற காலகட்டத்தில் ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரத்தை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கர்ப்பிணிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி விடும். விதிமுறைகளின்படி பயனாளிகள் மீதித்தொகையையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் ரூ.6 ஆயிரம் பெறுவர்.

10 அணு உலைகள்

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

* நாட்டின் அணுமின் உற்பத்தியை பெருக்கும் விதத்தில் புதிதாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 10 கனநீர் உயர் அழுத்த அணு உலைகள் அமைக்கப்படும். இந்த அணு உலைகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகம், அரியானா மாநிலங்களில் அமையும். இதன்மூலம் 7 ஆயிரம் மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* சர்வதேச பயங்கரவாதத்தையும், நாடு கடந்த திட்டமிட்ட குற்றங்களையும் தடுப்பதில் ஒத்துழைப்பது என இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

* கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பன்முக மாநாட்டு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடலாம்.

சட்ட திருத்தம்

* பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு கட்டுமானங்கள் செய்வதற்கு ஏற்ற வகையில் சட்ட திருத்தம் செய்து கொள்ளலாம்.

* அசாம் மாநிலத்தில் ரூ.155 கோடி செலவில் இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.

* மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக அனல்மின் நிலையங்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படும். இதற்காக ‘சக்தி’ என்னும் புதிய நிலக்கரி இணைப்பு கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

On Thursday, May 18, 2017 by Unknown in    


உடுமலை நகரில் வ.உ.சி.வீதி கல்பனா ரோடு சந்திப்பில் உள்ளது மனமகிழ் மன்றம் 94.73 சென்ட் பரப்பளவை கொண்ட இந்த இடம் உடுமலை நகராட்சியின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்ட மனமகிழ்மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மனமகிழ்மன்றத்தின் வளாகத்தில் 3 தங்கும் அறைகள், உணவு அறை, பிரதான ஹால் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. கடைகளும் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மனமகிழ் மன்ற வளாகத்தில் கட்டுப்பட்டுள்ள அறை கட்டிடங்கள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மனமகிழ் மன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்துக்குமான பிரச்சினை சில காலமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சி அதிகாரிகள், மனமகிழ்மன்றத்திற்கு சென்று அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததாக கூறப்படும் 3 தங்கும் அறைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக மீண்டும் அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் பிரதான ஹாலுக்கு ‘சீல்‘ வைத்தனர். அத்துடன் கடைகள் கட்டப்பட்டுள்ள பகுதியில் மேல்தளத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த 3 அறைகளுக்கும் ‘சீல்‘ வைத்த னர். உடுமலை நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்திற்குமான பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

பிரதான நுழைவு வாயில்

இந்த மனமகிழ்மன்ற வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் எப்போதும் போல் பூப்பந்து விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மனமகிழ்மன்ற பிரதான நுழைவு வாயிலின் கதவை (மெயின்கேட்) பூட்டி சீல் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் நேற்று பிற்பகல் மனமகிழ்மன்றத்திற்கு வந்துள்ளனர். அதற்கு அங்கிருந்த மனமகிழ்மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இந்த பிரச்சினை குறித்து கோர்ட்டை அணுகி உள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவு கைக்கு கிடைக்க ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் அதுவரை எந்த தொடர் நடவடிக்கையும் வேண்டாம் எனவும் கூறி மெயின் கேட்டை பூட்டி சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் மெயின்கேட்டை பூட்ட முடியாதபடி 2 கார்கள் மெயின் கேட்டின் நடுவில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். நகராட்சியின் 2 லாரிகள் அங்கு வந்தன. அந்த 2 லாரிகளும் மனமகிழ்மன்றத்தின் மெயின் கேட்டிற்கு முன்புறம் கார்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகே சாலையில் நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் மனமகிழ்மன்றத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

முடிவில் இப்போது இருக்கும் நிலையே தொடரும் வகையிலான கோர்ட்டு உத்தரவு ஓரிரு நாட்களில் கைக்கு கிடைத்துவிடும் என்று மனமகிழ்மன்றத்தினர் தெரிவித்தனர். அதுவரை மெயின் கேட்டை பூட்டி சாவியை போலீஸ் அதிகாரிகள் வைத்திருப்பது என்றும் கூறப்பட்டது.

பூட்டப்பட்டது

இதைத்தொடர்ந்து மனமகிழ்மன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியில் வந்தனர். மெயின் கேட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களும், லாரிகளும் அகற்றப்பட்டது.

மனமகிழ்மன்றத்தின் மெயின் கேட் மற்றும் பக்கவாட்டு கதவு ஆகியவை பூட்டப்பட்டது. அந்த 2 சாவிகளும் மனமகிழ் மன்றத்தாரால் போலீஸ் அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டது

Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    




காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்றுகாலை திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பனியன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டன.
ரூ.85 கோடி
உற்பத்தி பாதிப்பு
பின்னலாடை தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், நிட்டிங் நிறுவனங்களும் நேற்று செயல்படவில்லை. பின்னலாடை தொழில் சார்ந்த 90 சதவீத நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அந்த பகுதிகள் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் ஆர்டர்களின் அவசரம் கருதி செயல்பட்டன. சில நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள இரண்டாம் தர பின்னலாடை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பனியன் விற்பனை பாதிக்கப்பட்டது. நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி ரூ.85 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று திருப்பூரில் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்றம் குறித்து சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய பகிர்வை வழங்க வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடத்தை காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதன்தொடர்ச்சியாக அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு வட்ட கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு வட்டக்கிளை தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், வணிகவரி பணியாளர்கள் சங்கம், சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. உதவியாளர் முதல் ஒன்றிய ஆணையாளர்கள், தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
பணிகள் பாதிப்பு
இதேபோல் அரசு ஊழியர் சங்கம் அவினாசி வட்டக்கிளை சார்பில் அவினாசி தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டக்கிளைகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 3 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவுத்துறை, கருவூலத்துறை, வேளாண்மைத்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று (புதன்கிழமை) 2–வது நாளாக அரசு ஊழியர்கள் சார்பில் அந்தந்த வட்டக்கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
கடைகள் அடைப்பு
தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், அலங்கியம், மூலனூர், குண்டடம் அதன் சுற்றுப்பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. காங்கேயம், தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட்கள் மூடப்பட்டு இருந்தன.
மருந்து கடைகள் மற்றும் மருத்துவ மனைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. வாடகை ஆட்டோ, கார், லாரிகள் என எதுவும் இயக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தாராபுரத்தில் உழவர் சந்தைக்கு விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டுவராததால் உழவர்சந்தை வெறிச்சோடி கிடந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதுபோல் பிற பகுதிகளில் பஸ்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
இந்த போராட்டம் காரணமாக தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், அலங்கியம், மூலனூர் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆங்காங்கே சாலை மறியல்களும் நடந்தன.
சாலைமறியல்
தாராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் தனசேகர் தலைமையில் பூக்கடை முக்கு பகுதியில் அனைத்து கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து உள்பட காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர், ம.ம.க.வினர், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். இதுபோல், பொள்ளாச்சி ரோடு, குப்புச்சிபாளையம், காளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் வெள்ளகோவில் மற்றும் முத்தூரில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அலங்கியத்தில் கனராவங்கி முன்பு திரண்ட அனைத்து கட்சியினர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராபுரத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தாராபுரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. உள்பட 967 பேர் கைது
காங்கேயத்தில் பஸ்நிலையம் அருகே நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன் தலைமையிலும், நத்தக்காடையூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையிலும், படியூரில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அப்புக்குட்டி தலைமையிலும், குண்டடம் பஸ்நிறுத்தம் அருகே ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரசேகர் தலைமையிலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் திரளான விவசாயிகள் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தி.மு.க. மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து உள்பட மொத்தம் 967 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    





விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி சாலைமறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர்.
முழு அடைப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பங்கேற்றனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அவினாசி ரோடு, குமரன் ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு உள்பட மாநகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் திறந்து இருந்தன.
கடைகள் மூடப்பட்டன
ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை மொத்த வியாபார கடைகள், அரிசிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. மாநகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வெளியூரில் இருந்து நேற்று திருப்பூர் வந்தவர்கள் சாப்பிடுவதற்கும், டீக்குடிப்பதற்கும் கூட அவதிப்பட்டனர்.
தள்ளுவண்டி கடைகளில் தயிர் சாதம், தக்காளி சாதம் வைத்து மாநகரில் ஆங்காங்கே வீதிகளில் வைத்து விற்பனை செய்தனர். அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதுபோல் சைக்கிளில் கேன்கள் வைத்து டீ விற்பனை செய்து வந்தனர். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் அறைகளில் முடங்கி கிடந்தனர்.
உழவர் சந்தைகள்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தினமும் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 250 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இவற்றை மளிகை கடைக்காரர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து வாங்கி செல்வார்கள். முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூரில் உள்ள விவசாயிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். நேற்று விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராததால் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளுக்கும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராததால் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருப்பூர் பழைய பஸ்நிலையம் எதிரில் உள்ள குமரன் தினசரி மார்க்கெட்டிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தியேட்டர்களில் காட்சிகள் ரத்து
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்கிழமைதோறும் சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை நடைபெறுவது வழக்கம். இங்கு பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தை நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் யாரும் இல்லாமல் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோதிலும், திருப்பூரில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. சில தனியார் பஸ்கள் மட்டும் ஓடவில்லை. மினிபஸ்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வேன், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதன்காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவினாசி ரோடு, குமரன் ரோடு நேற்று வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் நேற்று காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுபோல் அவினாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
சாலைமறியல்
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், சி.ஐ.டி.யு. சார்பில் ரங்கராஜ், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பெரியார், அண்ணா சிலை முன்பிருந்து காலை 10 மணி அளவில் மறியல் போராட்டம் நடத்த தபால் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் அருகே உள்ள ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக டவுன்ஹால், ரெயில்வே மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் திஷா மிட்டல் தலைமையிலான போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
2,143 பேர் கைது
இதேபோல் மாவட்டத்தில் 30 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன் உள்பட 1,843 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 41 பெண்கள் அடங்குவார்கள். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சித்திரைவேல், திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கராஜ், பொருளாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வியாபாரிகள் சங்க தலைவர் ரத்னா மனோகர், தி திருப்பூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் குட்டி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டன
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலைவகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் விளக்க உரையாற்றினார். காங்கேயம், ஊத்துக்குளி,திருப்பூர் அவினாசி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்

Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    







திருப்பூர்: திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்  ஊழியர் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் ஒய்.அன்பு உள்பட மாவட்ட  நிர்வாகிகள் கோவையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து  இது குறித்து முறையிட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 167 கடை மூடப்பட்டுள்ளன. இதில் வேலை செய்த  ஊழியர்கள் தற்போது வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் பிற பகுதிகளில்  செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருக்கும் நிலையில்  வெளியாட்களை கொண்டு வியாபாரம் செய்யப்படுகிறது. ஒருபுறம் டாஸ்மாக்  ஊழியர்கள் வேலையிழந்திருக்கும்போது மறுபுறம் வெளியாட்களை பயன்படுத்தி பல  லட்சம் ரூபாய் வியாபாரம் நடைபெறும் கடைகளில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, மேற்படி கடைகளில் இருக்கக்கூடிய வெளியாட்களை வெளியேற்றிவிட்டு,  வேலையிழந்து நிற்கக்கூடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.  மூடப்பட்ட கடைகளில் பல லட்சம் மதிப்புள்ள மதுபான சரக்குகளும், தளவாடங்களும்  உள்ளன. இவற்றுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட கடைகளில் வேலை செய்து வந்த  ஊழியர்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் டாஸ்மாக் நிர்வாகமே அந்த  கடைகளுக்குரிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் புதிய கடைக்கு  இடம் பார்க்க ஊழியர்களை நிர்பந்தம் செய்வதையும் கைவிட வேண்டும் என்று  சிஐடியு சார்பில் முதுநிலை மண்டல மேலாளரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த  கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்வதாக மண்டல முதுநிலை மேலாளர்  கூறினார்
On Monday, April 24, 2017 by Unknown in    








அவிநாசி; அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 190 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5300 முதல் ரூ.5925 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2100 முதல் ரூ.3300 வரையிலும் ஏலம் போனது. எல்.ஆர்.ஏ. ரகப்பருத்தி மற்றும் டி.சி.எச். ரகப்பருத்தி வரத்து இல்லை. மொத்தம் ரூ.3 லட்சத்து ஐந்தாயிரத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.ஏலத்தில், அவிநாசி, அன்னூர், திருப்பூர், பல்லடம், சேவூர், குன்னத்தூர், பென்னாகரம்,  கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர்,  புளியம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து 90 விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 8 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் கலந்து கொண்டனர்
On Monday, April 24, 2017 by Unknown in    







திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை மதுபானத்திற்கே செலவு செய்வதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் அனைத்து  மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் நிர்வாகம் பொது மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 15 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபான பிரியர்கள் லீவு எடுக்காமல் தினமும் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகிறார்கள். ஒரு சில கூலித்தொழிலாளர்கள் மதுக்கடைகள் துாரமாக இருப்பதால் குடியை நிறுத்தியுள்ளனர். பின்னலாடை நிறுவனங்களில் கடினமாக உழைக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் தற்போது குடிப்பதை நிறுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பின்னலாடை நிறுவனங்களுக்கு அனைத்து தொழிலாளர்களும் லீவு எடுக்காமல் வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாநகரில்  மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வசதி, தரமான தார் ரோடு, குப்பைகளை அகற்றியும், சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்காங்கே சாக்கடை கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.  தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்
On Monday, April 24, 2017 by Unknown in    






திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள கல்லாங்காடு  சுப்பரமணியம் நகரை சேர்ந்தவர் சுதாகர் (37). அதே பகுதியில் உள்ள ஒரு பனியன்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (35).  இவர்களின் மகள் மது (8), அனு (5).இவர்களில் மதுஅதே  பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சுதாகர் தனது மனைவி மற்றும் இரு  மகள்களையும் பைக்கில் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றார். வெள்ளியங்காடு 60  அடி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது  மோதியது. இதில் சுதாகர், வனிதா, அனு ஆகிய 3 பேரும் கீழே விழுந்து  படுகாயம் அடைந்தனர். மது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள்  மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு  செய்து திண்டுக்கல் மாவட்டம் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர்  வள்ளிசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
On Monday, April 24, 2017 by Unknown in    






திருப்பூர்: தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவர் தமிழ்செல்வன்,  தங்கவேல், உணவு பாதுகாப்பு அலுவர்கள் முருகேஷன், தங்கவேல் மற்றும் ஊழியர்கள் நேற்று திருப்பூர் அதியமான் வீதியில் உள்ள பகுதியில் மாம்பழம் வைத்திருக்கும் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெள்ளிங்கிரி (35) என்பவர் குடோனில் ரசாயணக்கல் வைத்து சுமார் 3 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சாலமன் என்பவருக்கு செந்தமான குடேனில் 2 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, இரண்டு குடோன்களிளும் உள்ள சுமார் 5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதனை மாநகராட்சி குப்பை கிடங்கில் வைத்து அழிக்க ஊழியர்களுக்கு உத்தவிட்டனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தெரிவிக்கையில்: ரசாயணக்கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடும்போது, உடலில் உணவு குழாய், குடல் புண், வயிற்றுப்போக்கு, சிலநேரங்களில் புற்றுநோய் வருவதற்க்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற பழங்களை குழந்தைகள் சாப்பிடும் போது தொண்டை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழக்கும் வாய்ப்புள்ளது. 5 டன் மாம்பழங்களையும் திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்படும். மேலும், சம்பத்தப்பட்ட கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
On Monday, April 24, 2017 by Unknown in    






உடுமலை: உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
 உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28ம்தேதி துவங்கியது. கம்பம் நடுதல், கொடியேற்றம், பூவோடு ஏந்துதல், திருக்கல்யாண நிகழ்ச்சி என திருவிழா களைகட்டியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு மாரியம்மன் சூலதேவருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மதியம் பரிவேட்டை நடந்தது. தைத்தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து துவக்கிவைத்தார். பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், மகேந்திரன் எம்பி,  மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் சாதனை குறள், டிஎஸ்பி விவேகானந்தன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தி,  இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, நகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் தயானந்தன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் வடம் பிடித்தனர். தேரோட்டத்தை காண காலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் உடுமலையில் குவிய துவங்கினர். பக்தர்களுக்கு தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் மாரியம்மன் கோயிலில் புறப்பட்டு பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, வடக்கு குட்டை வீதி, பெரியகடை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் பொள்ளாச்சி ரோட்டை அடைந்து மாலை 6.30 மணிக்கு  நிலைக்கு வந்து சேர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, பாலக்காடு கேசவன் என்ற யானை தேரை தள்ளியது. இன்று (24ம் தேதி) காலை குங்கும அபிசேகம், மாலையில் சாந்தி பூஜை, இரவு 8 மணிக்கு அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு குட்டை திடலில் வாணவேடிக்கையும் நடக்கிறது. நாளை மகா அபிஷேகம், முத்துப்பல்லக்கு ஊர்வலத்துடன் திருவிழா நிறைவடைகிறது
On Monday, April 24, 2017 by Unknown in    





திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் பலர் இருந்தும், குழாய் உடைப்பு பிரச்னை தொடர் கதையாகவே இருக்கிறது. பி.என்.ரோடு, போயம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம், பங்களா ஸ்டாப், புஷ்பா தியேட்டர், குமார் நகர், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிச்சிபாளையம் வாட்டர் டேங்க், வினோபா நகர், வெள்ளியங்காடு 60 அடி ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு, சபாபதிபுரம், மங்கலம் ரோடு கோழிப்பண்ணை, குளத்துப்புதூர் போன்ற இடங்களில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கால், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காக, காலி குடங்களுடன் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் மக்கள் ரோட்டுக்கே வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே பிரதான குடிநீர் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகியது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது
On Monday, April 24, 2017 by Unknown in    
தாராபுரம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 48 இருந்தன. இதையடுத்து காரை ஓட்டி வந்த மூலனூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமாரை (வயது 32) பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொண்டு வந்தது போலி மதுபாட்டில்கள் என்பதும், அவற்றை தாராபுரம்–திருப்பூர் ரோட்டில் வேங்கிபாளையம் பகுதியில் விவசாயி பழனிசாமி தனது தென்னந்தோப்பில் நடத்தி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
455 லிட்டர் எரிசாராயம்
பின்னர் அவரை அழைத்துக்கொண்டு தென்னந்தோப்புக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அதில் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கினார். அவர், செங்கப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (35), வெள்ளகோவிலை சேர்ந்த செந்தில்வெங்கடேஷ் (35) என தெரியவந்தது.
உடனே போலீசார் தென்னந்தோப்பில் இருந்த ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது, அங்கு 455 லிட்டர் எரிசாராயமும், 100 போலி 





மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் எந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
ரமேஷ் கொடுத்த தகவலின் பேரில், செங்கப்பள்ளியை அடுத்த காளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 530 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை பதுக்கி வைக்க உதவிய அந்த தோட்ட காவலாளியான செங்கப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கத்தை (35) போலீசார் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சதீஸ்குமார், ரமேஷ், செந்தில்வெங்கடேஷ், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய பழனிசாமி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகிறார்கள்