Thursday, May 18, 2017

On Thursday, May 18, 2017 by Unknown in    


உடுமலை நகரில் வ.உ.சி.வீதி கல்பனா ரோடு சந்திப்பில் உள்ளது மனமகிழ் மன்றம் 94.73 சென்ட் பரப்பளவை கொண்ட இந்த இடம் உடுமலை நகராட்சியின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்ட மனமகிழ்மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மனமகிழ்மன்றத்தின் வளாகத்தில் 3 தங்கும் அறைகள், உணவு அறை, பிரதான ஹால் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. கடைகளும் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மனமகிழ் மன்ற வளாகத்தில் கட்டுப்பட்டுள்ள அறை கட்டிடங்கள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மனமகிழ் மன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்துக்குமான பிரச்சினை சில காலமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சி அதிகாரிகள், மனமகிழ்மன்றத்திற்கு சென்று அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததாக கூறப்படும் 3 தங்கும் அறைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக மீண்டும் அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் பிரதான ஹாலுக்கு ‘சீல்‘ வைத்தனர். அத்துடன் கடைகள் கட்டப்பட்டுள்ள பகுதியில் மேல்தளத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த 3 அறைகளுக்கும் ‘சீல்‘ வைத்த னர். உடுமலை நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்திற்குமான பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

பிரதான நுழைவு வாயில்

இந்த மனமகிழ்மன்ற வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் எப்போதும் போல் பூப்பந்து விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மனமகிழ்மன்ற பிரதான நுழைவு வாயிலின் கதவை (மெயின்கேட்) பூட்டி சீல் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் நேற்று பிற்பகல் மனமகிழ்மன்றத்திற்கு வந்துள்ளனர். அதற்கு அங்கிருந்த மனமகிழ்மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இந்த பிரச்சினை குறித்து கோர்ட்டை அணுகி உள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவு கைக்கு கிடைக்க ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் அதுவரை எந்த தொடர் நடவடிக்கையும் வேண்டாம் எனவும் கூறி மெயின் கேட்டை பூட்டி சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் மெயின்கேட்டை பூட்ட முடியாதபடி 2 கார்கள் மெயின் கேட்டின் நடுவில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். நகராட்சியின் 2 லாரிகள் அங்கு வந்தன. அந்த 2 லாரிகளும் மனமகிழ்மன்றத்தின் மெயின் கேட்டிற்கு முன்புறம் கார்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகே சாலையில் நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் மனமகிழ்மன்றத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

முடிவில் இப்போது இருக்கும் நிலையே தொடரும் வகையிலான கோர்ட்டு உத்தரவு ஓரிரு நாட்களில் கைக்கு கிடைத்துவிடும் என்று மனமகிழ்மன்றத்தினர் தெரிவித்தனர். அதுவரை மெயின் கேட்டை பூட்டி சாவியை போலீஸ் அதிகாரிகள் வைத்திருப்பது என்றும் கூறப்பட்டது.

பூட்டப்பட்டது

இதைத்தொடர்ந்து மனமகிழ்மன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியில் வந்தனர். மெயின் கேட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களும், லாரிகளும் அகற்றப்பட்டது.

மனமகிழ்மன்றத்தின் மெயின் கேட் மற்றும் பக்கவாட்டு கதவு ஆகியவை பூட்டப்பட்டது. அந்த 2 சாவிகளும் மனமகிழ் மன்றத்தாரால் போலீஸ் அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டது

0 comments: