Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
கடைகள் அடைப்பு
தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், அலங்கியம், மூலனூர், குண்டடம் அதன் சுற்றுப்பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. காங்கேயம், தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட்கள் மூடப்பட்டு இருந்தன.
மருந்து கடைகள் மற்றும் மருத்துவ மனைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. வாடகை ஆட்டோ, கார், லாரிகள் என எதுவும் இயக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தாராபுரத்தில் உழவர் சந்தைக்கு விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டுவராததால் உழவர்சந்தை வெறிச்சோடி கிடந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதுபோல் பிற பகுதிகளில் பஸ்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
இந்த போராட்டம் காரணமாக தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், அலங்கியம், மூலனூர் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆங்காங்கே சாலை மறியல்களும் நடந்தன.
சாலைமறியல்
தாராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் தனசேகர் தலைமையில் பூக்கடை முக்கு பகுதியில் அனைத்து கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து உள்பட காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர், ம.ம.க.வினர், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். இதுபோல், பொள்ளாச்சி ரோடு, குப்புச்சிபாளையம், காளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் வெள்ளகோவில் மற்றும் முத்தூரில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அலங்கியத்தில் கனராவங்கி முன்பு திரண்ட அனைத்து கட்சியினர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராபுரத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தாராபுரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. உள்பட 967 பேர் கைது
காங்கேயத்தில் பஸ்நிலையம் அருகே நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன் தலைமையிலும், நத்தக்காடையூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையிலும், படியூரில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அப்புக்குட்டி தலைமையிலும், குண்டடம் பஸ்நிறுத்தம் அருகே ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரசேகர் தலைமையிலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் திரளான விவசாயிகள் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தி.மு.க. மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து உள்பட மொத்தம் 967 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்

0 comments: