Wednesday, March 14, 2018

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    

வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு
கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை
மாலை 3.00 மணியளவில் கல்லூரி திறந்த வெளி கலையரங்கத்தில்
அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு
அலுவலர் திரு. என். ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு விழாச் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்லூரியின் பகுதி V செயல்பாட்டு விரிவாக்க அறிக்கையை (2017-18
கல்வியாண்டிற்கு) கல்லூரி விரிவாக்கப் பணிகள் புல முதன்மையர் முனைவர்
சி.தனபால் அவர்கள் தொகுத்தளித்தார்கள்.
மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி ‘ஸ்கோப்’
தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் எம். சுப்புராமன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள். சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கான
விருதுகளை கல்லூரியின் துணை முதல்வர் எ·ப். சாமுவேல் கிறிஸ்டோபர்
அவர்களும், சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் ஆ.ரெல்டன்
அவர்களும் வழங்கினார்கள். பகுதி V பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களை
கல்லூரி முதல்வர் பாராட்டி சிறப்பு செய்தார்கள்.
சிறந்த சேவை செய்த பிரிவிற்கான விருதினை மாநகராட்சி ஆணையர்
அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
முன்னதாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய
இந்நிகழ்விற்கு வருகை தந்தோரை கல்லூரி இயற்கை கழக ஆசிரிய
பொறுப்பாளர் திருமதி கிளெனி ஜோஸ்லின் அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரி
விரிவாக்கப் பணிகள் புல இணை முதன்மையர் முனைவர் எம். கேபிரியேல்
அவர்கள் நன்றி கூறினார்கள்.

0 comments: