Wednesday, September 12, 2018

On Wednesday, September 12, 2018 by Tamilnewstv   

திருச்சி உறையூர் ராமலிங்கநகர் விவிட் மாண்டஸரி மழலையர் பள்ளியில் இயற்கையையும், சுற்றுசூழலையும் பாதுகாக்கும் புதிய முயற்சியாக விதை விநாயகர் சதுர்த்தி விழாவினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.
புவி வெப்பமடைவதை தடுக்கவும், மழை வளம் பெறவும் மரம், செடிகள் அதிகம் வளரவேண்டி பள்ளி-கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், குடும்ப விழாக்கள் மட்டுமல்லாது இயற்கையை போற்றி பாதுகாத்திட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களுடன் செடிகளை கொடுத்து வருவது அறிந்த ஒன்று.

அதேபோல் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் உதவியுடன் விதைப்பந்துகளை தயாரித்து வயல் வெளிகளிலும், ஆற்றங்கரைகளிலும், சமவெளிகளிலும் சமூக ஆர்வலர்கள் தூவி வருகின்றனர். மழைக்காலம் வரும் சமயம் இதுவென்பதால் அவைகளாகவே நீர் கிடைக்கப்பெற்றபின் வனங்களாக மாறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் நாளை நடக்கவிருக்கின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று விவிட் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்கையை நேசிக்கும் சிந்தனையையும், முன்னோர்கள் கடைபிடிக்கும் இந்த விழாக்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் களி மண்ணால் தத்தம் கரங்களால் விநாயகரை வடிவமைக்க வைத்து அந்த விநாயகர் சிலைகளில் வெண்டை, பாகற்காய், அவரை, கீரை வகைகளின் விதைகள், வெள்ளரி பிஞ்சுகளின் விதைகளை பதித்து அவரவர் வீடுகளுக்கு கொடுத்து மரம், செடி கொடிகளின் விதைகளை மாணவர்களும் பெற்றோர்களும் தத்தம் இல்லங்களில் விதைக்கும் புதுவித விழிப்புணர்வினை இன்று ஏற்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், இந்த விநாயகர் உருவங்களை வடிவமைத்த மழலையர்கள் மனதில் பெரும் உற்சாகமும், பொற்றோர்கள் மனதில் பரவசமும் உச்சமாகத்தான் இருந்தது என்றும், இந்த விநாயகர் சிலைகளை தத்தம் வீடுகளிலேயே சிறிய டப்பாக்கள், மண் பாண்டங்களில் 3-வது நாள் கரைத்து சிறிதளவு மண் சேர்த்து விட்டால் விரைவில் இந்த விநாயகர்கள் செடியாய், கொடியாய், மரமாய் இல்லங்களை அலங்கரிப்பார்கள் எனவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவிட் பள்ளியின் தாளாளர் கமலசரஸ்வதி, முதல்வர் கல்பனா பாலாஜி, ஆசிரியை ஜாஸ்மின் மற்றும் அலுவலக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments: