Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



நம்மில் எத்தனை பேர்கள் மகாத்மா காந்தியைப் பார்த்திருப்போம்? ’48ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்திருக்காது. இதற்கு முன் பிறந்தவர்களிலும் எத்தனை பேர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்திருக்கும்? அவரைப் பற்றிக் கேள்விப்படும்போதும், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும்போதும் இந்த மகாத்மா நம்மிடையே இப்போது நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைக்காமல் இருந்திருக்கவும் முடியாது. இந்தியர்கள் பலரின் இந்தக் கனவு நனவாகியது 1983ஆம் ஆண்டு, ஸர் ரிச்சர்ட் அட்டன்பரோ என்கிற இங்கிலாந்து இயக்குநர் மூலம். வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்களை எடுப்பதில் மன்னன் என்று பெயர் பெற்ற இவர், தனது ‘காந்தி’ திரைப்படம் மூலம் நம் கண் முன்னே காந்தியை நடமாடவிட்டார். 
 
சமீபத்தில் மறைந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் வெள்ளித் திரையின் மீதான காதலுக்கு வயது 60. முதல் முதலில் மேடை நடிகராக வெள்ளித் திரைப் பயணத்தைத் தொடங்கிய அட்டன்பரோ, இயக்குநராக மாறினார். நடிகராக எந்த அளவிற்கு விரும்பப்பட்டாரோ, அதே அளவு இயக்குநராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டார். இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டினார். 
 
1923 ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜில் பிறந்த அட்டன்பரோ, தனது 12ஆம் வயதில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ராயல் அகாதமி ஆப் டிராமடிக் ஆர்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற இவர், 1941ஆம் ஆண்டு முதன்முதலில் மேடை ஏறினார். இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு நோயல் கவர்ட் – இன் ‘இன் விச் வி சர்வ்’ (In Which We Serve) என்ற படத்தில்  தன்னை நம்பியவர்களைக் கைவிட்டுவிட்டு ஓடும் கப்பல் மாலுமியாக, சிறிய ஆனால் மிகவும் கனமான பாத்திரத்தில் நடித்து, பார்வையாளர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து வந்த திரைப்படங்களில் இதே போன்ற கதாபாத்திரங்களே இவருக்குக் கிடைத்தன. 1947ஆம் ஆண்டு ‘ப்ரைடன் ராக்’ (Brighton Rock) படத்தில், மனநோய் பீடித்த இளம் தாதாவாக நடித்த திரைப்படம், இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.

 
அடுத்த முப்பது ஆண்டுகளில் பல பிரித்தானிய படங்களில் நடித்தார். ‘50 களில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். இவர் தனது மேடை வாழ்க்கையின் துவக்கத்தில் நடித்த அகதா கிறிஸ்டியின் நாடகம் ‘தி மௌஸ்ட்ராப்’ உலகத்தில் நீண்ட நாட்களுக்கு நடிக்கப்பட்ட நாடகங்களுள் ஒன்று. இவரும் இவர் மனைவியும் இந்த நாடகத்தில் நடித்த ஆரம்ப கால நடிகர்கள். 1952இல் மேடையேறிய இந்த நாடகம், 2007 வரை நடந்து வந்திருக்கிறது.
 
1969இல் வெளிவந்த ‘ஓ! வாட் அ லவ்லி வார்’ (O! What a Lovely War!) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். அப்போதிலிருந்து நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். 50 களின் இறுதியில் திரைப்படங்களைத் தயாரிக்கவும் தொடங்கினார். திரைப்படத் துறையைச் சார்ந்த பல அமைப்புகளில் தலைவர் பதவியையும் வகித்தார்.
 
இரண்டாம் உலகப் போரில் ராயல் விமானப் படையில் பணியாற்றிய இவர், ஆங்கில நடிகை ஷீலா சிம் என்பவரை 1945ஆம் ஆண்டு மணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். 2004ஆம் ஆண்டு மூத்த மகள், பேத்தி ஆகியோரை ஆசிய சுனாமியில் பறிகொடுத்தார். இவரது மகன் மைக்கேல் அட்டன்பரோவும் இயக்குநரே. அட்டன்பரோவின் தந்தை, லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் முதல்வராக இருந்தவர். ரிச்சர்ட் அட்டன்பரோ, இந்தப் பல்கலைக்கழகத்தின் புரவலர். 1997ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் பெயரில் அவரைக் கௌரவிக்கும் வகையில் ‘ஊனமுற்றோர்களுக்கான கலை மையம்’ இந்தப் பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 
 
காந்தி திரைப்படம் மட்டுமல்ல, இவரை இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியது; நாம் மிகவும் ரசித்துப் பார்த்த ‘ஜுராசிக் பார்க்’ படத்திலும் நடித்தவர் இவர். ஜான் ஹம்மண்ட் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தை அவ்வளவு சுலபமாக நம்மால் மறக்க முடியாது. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் அழிந்த விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்களை மறுபடியும் தாம் உருவாக்கியிருக்கும் விந்தையை மிகவும் பெருமையுடன் சொல்லும்போதும், இறுதியில் தான் உருவாக்கிய ஜுராசிக் பார்க்கைத் தானே மூடும் நிலை வரும்போது கடைசி முறையாக அந்த இடத்தை திரும்பிப் பார்த்து வேதனைப்படும்போதும் இவரது நடிப்பை நாம் மிகவும் ரசிக்கலாம்.

0 comments: