Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன் முறை தவிர நேரிலும், தொலைபேசி மூலமும் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும் என்று கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கியாஸ் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும் எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன், மற்றும் தானியங்கி சேவை மூலம் மட்டுமே கியாஸ் சிலிண்டர்களை பதிவு செய்கிறார்கள். அவர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பதிவு செய்ய முறையிட்டால், அங்குள்ள ஊழியர்கள் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
மேலும் ஒரு சில வினியோகஸ்தர்களிடம் புதிதாக கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற விண்ணப்பித்தால், சிலிண்டருடன் வேறு வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்கக்கூறி கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது. இதுதவிர புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க புத்தகம் இல்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் இருப்பதில்லை.
இவ்வாறு பல்வேறு புகார்களை அவர்கள் கூறினார்கள்.
இதைதொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் பேசும் போது கூறியதாவது:–
வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் செல்போன் இருக்கும் என்று கூறமுடியாது. எனவே அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும் எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன் முறை தவிர நேரிலும், தொலைபேசி மூலமும் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏதுவாக அவர்களின் தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதிவைக்க வேண்டும். மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதை கட்டாய படுத்தக்கூடாது. அனைத்து அலுவலகங்களிலும் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க ஆலோசனை புத்தகம் வைத்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் கூறினார்.

0 comments: