Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by Unknown in , ,    
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மனைவி தேனம்மாள். இவர்களது மகள் விமலாதேவி (வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி போலீசில் தெரிவித்தார்.
அதன்பின்னர் பெற்றோருடன் விமலாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விமலாதேவி நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த பெற்றோர் உறவினர்கள் உதவியோடு உடலை எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் போலீசில் புகார் செய்தார்.
தாசில்தார் கஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். அவர் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்தாரா? அல்லது கவுரவக்கொலை நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விமலா தேவியின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாய் தேனம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.

0 comments: