Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் பணிமனையில் கண்டக்டர்–டிரைவர்கள், தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட 5 பணிமனைகள் உள்ளன. இதில் நகர மற்றும் புறநகர் பகுதிக்கு 558 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் திருப்பூரில் உள்ள 1 மற்றும் 2 பணிமனைகளில் 339 டிரைவர்களும், 374 கண்டக்டர்களும் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 2,560 டிரைவர், கண்டக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., தே.மு.தொ.ச., பட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். உள்பட 12 தொழிற்சங்கங்கள் செயல்படுகிறது. அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து பிற 11 தொழிற்சங்கங்களின் பேரவை கூட்டம் கடந்த 22–ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29–ந்தேதி (இன்று) வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களிடம் அரசு இருமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக தீர்வு ஏதும் ஏற்படவில்லை. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் (அண்ணா தொழிற்சங்கம் தவிர) அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சென்னை, சேலம், கும்பகோணம், மதுரை போன்ற கோட்டங்களில் நேற்றே அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பணிக்கு வராமல் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். இதன்காரணமாக சேலம், கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு நேற்று பஸ்கள் வரவில்லை. இதனால் திருப்பூர் புதிய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு சென்று வரும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் அவற்றில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய தொழிலாளர்களும், விடுமுறைக்காக தென்மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்களும் திருப்பூர் வரமுடியாமலும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் பணி முடித்து வழக்கம் போல் பஸ்களை தொழிலாளர்கள் அரசு பணிமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இன்று போராட்டம் அறிவித்துள்ள சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எல்.பி.எப். போன்ற தொழிற்சங்கங்களை சேர்ந்த கண்டக்டர்–டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் திருப்பூர் கிளை பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பணிமனையில் 20–க்கும் அதிகமான பஸ்கள் இயங்காமல் நிறுத்தப்பட்டன. உடனே பணி முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்த அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை கொண்டும், தற்காலிக தொழிலாளர்களை கொண்டும் ஓடாமல் இருந்த பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த போராட்டத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 50–க்கும் மேற்பட்ட போலீசார் அரசு போக்குவரத்து பணிமனை முன் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பணிமனைக்கு வந்து செல்லும் அனைவரையும் வீடியோவும் எடுக்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் இயங்கின. இதுதவிர இன்று(திங்கட்கிழமை) வழக்கம்போல் பஸ்கள் இயங்கும் என்று அண்ணா தொழிற்சங்கத்தினரும், பஸ்கள் ஓடாது என்று பிற தொழிற்சங்கத்தினரும் துண்டு பிரசுரம் அச்சடித்து ஒட்டி இருந்தனர். இதனால் பொதுமக்கள் இன்று பஸ்கள் ஓடுமா? ஓடாதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

0 comments: