Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by farook press in ,    
விசைத்தறித் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரும்படி திருப்பூர் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) 8வது தலைமை மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம் சமுதாயக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற தலைமை மகாசபைக்கு இந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல் இந்த மகாசபையை தொடக்கி வைத்து உரையாற்றினார். ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தாரும் தொழிலாளர்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர். தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நுட்பமாகச் செயல்பட வேண்டும் என்று கே.தங்கவேல் கூறினார்.
சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி அறிக்கை சமர்ப்பித்தர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.மூர்த்தி மகாசபையை வாழ்த்திப் பேசினார். 
தீர்மானங்கள்
இம்மகாசபையில், விசைத்தறித் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைப்படி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும், நலவாரிய செயல்பாட்டைச் சீரமைத்து உறுப்பினர்களுக்கான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், விசைத்தறித் தொழிலாளர்கள் உரிய வீட்டு வசதி இல்லாமல் பொருளாதார நெருக்கடியுடன் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பசுமை வீடு கட்டித்தரும் திட்டத்தை விசைத்தறித் தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
இந்த மகாசபையில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக அ.பழனிசாமி, மாவட்டப் பொதுச் செயலாளராக பி.முத்துசாமி, மாவட்டப் பொருளாளராக ஏ.ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர்களாக புதுப்பாளையம் கே.முருகன், அய்யம்பாளையம் ஈஸ்வரன், ராசாகவுண்டம்பாளையம் பழனிசாமி, மாவட்டச் செயலாளர்களாக சுல்தான்பேட்டை கே.வேலுச்சாமி, திருப்பூர் பாலகிருஷ்ணன், வெள்ளகோவில் நல்லதம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 16 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முடிவில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவரும், விசைத்தறி தொழிலாளர் அரங்க மாநில கன்வீனருமான எம்.சந்திரன் மகாசபையை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார். இதில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
---------------------

0 comments: