Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by farook press in ,    
திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை தலைதூக்கியுள்ளதால், தொழிலாளர்களை தேடி செல்ல திருப்பூர் தொழில் துறையினர் தயாராகி வருகின்றனர்.திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகமும், சுமார் ரூ.6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு வர்த்தகமும் பின்னலாடை மூலம் நடைபெற்று வருகிறது. சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், சுமார் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். உலக அரங்கில் பின்னலாடை தொழிலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ள திருப்பூர் நகரம், கடந்த சில ஆண்டுகளாகவே நூல் விலை உயர்வு, மின்தடை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, சாயப்பட்டறை மூடல், டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.
இதன் காரணமாக திருப்பூரில் இருந்து வெளியேறிவிட்ட பெரும்பாலான தொழிலாளர்களை வரவழைத்து வேலை வாய்ப்பளிக்க திருப்பூர் தொழில் துறையினர் தயாராக உள்ளனர். ஆனால் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் திருப்பூரில் போதிய அளவுக்கு இல்லை என்றும் பொதுவான கருத்து உள்ளது. திருப்பூரில் பணியாற்றி வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை திருப்பூரில் அதிகம். இது தவிர பீகார், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
வெளியில் இருந்து வந்து திருப்பூரில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. வீட்டு வாடகை, அட்வான்ஸ் என பல்வேறு தேவைகள் பனியன் தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்றன. இதற்காகவே திருப்பூரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்கள், தங்குமிடம் இலவசம் என்ற உறுதிமொழியை கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு வரவழைக்கின்றன.
தனியாக வசிக்கும் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் வழங்கும் அறைகளில் தங்கிக்கொண்டு வேலைசெய்கின்றனர். ஆனால் குடும்பத்தோடு வரும் தொழிலாளர்கள் இதை விரும்புவதில்லை. இதனால் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அப்படியே வீடு கிடைத்தாலும் கூடுதல் வாடகை மற்றும் செலவுகளால் திணறுகின்றனர்.திருப்பூரில் 900–க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள், 452 சாய, சலவைப்பட்டறைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிட்டிங், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தையல் நிலையங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஜா பட்டன் நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ள அடிப்படை தொழிலாளர்களை தவிர, நிர்வாகப்பணியில் ஈடுபட்டுள்ள மேல் மட்ட ஊழியர்கள், நிர்வாகிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திருப்பூரில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈரோடு, கோவை, கோபி, தாராபுரம், உடுமலை, பாலக்காடு போன்ற பகுதிகளில் இருந்து ரயில், பஸ் மூலம் திருப்பூர் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்பூர் தொழில் நகரம் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அடங்கி விடுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் தங்கள் வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளனர். இவர்களை அழைத்து வர பனியன் நிறுவனங்கள் சார்பில் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2011–ம் ஆண்டில் சாயப்பட்டறைகள் மூடப்பட்ட சமயத்தில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்தனர். அதை தொடர்ந்து திருப்பூருக்கு வந்து நிரந்தரமாக தங்கி வேலை செய்ய தொழிலாளர்களுக்கு பழைய ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டில் நூல் விலை உயரவில்லை. மின் தடை பிரச்சினையும் இல்லை. அதேபோல் வெளிநாட்டு பின்னலாடை உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் அதிகமாக திருப்பூருக்கு கிடைத்ததால், பின்னலாடை தயாரிக்கும் பணி மும்முரமாக காணப்பட்டது. கடந்த 2010–ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைதான் திருப்பூரின் பழைய உற்சாகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் திருப்பூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை தலைதூக்குவது வழக்கம். அதற்கு தகுந்தாற்போல் சில நிறுவனங்கள் சார்பில் தென் மாவட்ட பகுதிகளுக்கு சென்று நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை அழைத்து வருவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை வெளியூரில் நடத்தி அதன் மூலம் ஆட்களை அழைத்து வர திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:–
சாதாரணமாக அடிப்படை பின்னலாடை உற்பத்தியை தெரிந்துகொள்ள 3 மாத கால பயிற்சியை வழங்கினால் தொழிலாளர்களுக்கு அது போதுமானதாக இருக்கும். இது ஆரம்பகால பயிற்சிதான். இதை தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு சென்று திருப்பூர் தொழில் துறையினரும், தொழிலாளர் துறையினரும் இணைந்து பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். இதற்கான முயற்சிகளை டீமா செய்து வருகிறது. ஆண்டுக்கு 4 முறை பயிற்சி முகாம்களை நடத்தி நன்கு தேர்ச்சி பெற்றவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்து அவர்கள் மூலம் பின்னலாடைகளை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்பை தொடர்ச்சியாக வழங்க முடியும். சர்வதேச அளவில் இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் நன்கு திறன் மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மூலம் ஆடைகளை தயாரிக்கும் முறை திருப்பூரில் அதிகளவில் பெருகும். அரசை எதிர்பார்ப்பதை விட நமக்கு நாமே என்ற திட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகளையும் ஒன்று சேர்த்து இந்த முறையை மாவட்டம் தோறும் உருவாக்கினால் திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது.திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:–
வெளிமாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை அடிக்கடி நடத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வட மாவட்ட பகுதிகளுக்கு சென்று ஆட்களை அழைத்து வந்தோம். இந்த ஆண்டும் அதே போல் நமது திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகளை ஒன்று சேர்த்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேலை வாய்ப்பு முகாம்களை உருவாக்கி ஆட்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதி, உணவு, நல்ல சம்பளம் போன்ற விஷயங்கள் இருந்தால் திருப்பூரை விட்டு அவர்கள் போக மாட்டார்கள். தனித்தனியாக செயல்படுவதை விட இந்த விஷயத்தில் அனைத்து தொழில் அமைப்புகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தி செயல்பட வேண்டும்.திருப்பூர் ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:–இந்த முறை பீகார், அசாம், ஒடிசா பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் திருப்பூருக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களை அழைத்து வருபவர்களிடம் எத்தனை ஆட்கள் தேவை என்பதை கூறினால் போதும், திருப்பூர் தொழில் துறையினருக்கு தேவையான நபர்களை அவர்கள் அழைத்து வருவார்கள். தங்கும் வசதிகள், தண்ணீர், விடுதி, உணவு, சம்பளம் என அவர்கள் மீது அக்கறை காட்டினால் போதும். அவர்கள் திருப்பூரை விட்டு எங்கும் போகமாட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் பயிற்சி வழங்கி அழைத்து வரலாம். ஆனால் திருப்பூரில் உள்ள தொழில் அமைப்பினர் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களுக்கு தனி அடையாள அட்டையை வழங்க வேண்டும். ஒரு கம்பெனியில் இருந்து மற்ற இடங்களுக்கு மாறி செல்லும்போது அந்த அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தவேண்டும். இதன் மூலம் உரிய அனுமதி இல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு ஆட்கள் மாறிச்செல்லும் நிலை குறையும். குழப்பங்களும் அகலும். பயிற்சி வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு திருப்பூரில் நிறைய மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதை விழிப்புணர்வு மூலம் புரிய வைக்க வேண்டும்.
எம்.எல்.எப் தொழிற்சங்க பொதுச்செயலாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கூறியதாவது:–
திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று ஒவ்வொரு அரசும் அறிவிப்பை வெளியிட்டதோடு சரி, ஆனால் எவ்வித முன்னேற்றப்பணிகளும் நடைபெறவே இல்லை. வசிக்க வீடு கிடைக்காமல் திருப்பூரில் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கூடுதல் வாடகை செலவுகளால் தவிக்கின்றனர். அடிப்படை நிலை பனியன் தொழிலாளர்கள் தங்களுக்கு குடியிருப்பு வசதிகளை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இங்குள்ள தொழிலாளர்கள் நல்லமுறையில் இருக்கிறார்கள் என்று கூறினாலும், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது அங்கு தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட குடியிருப்பு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பு வசதிகளை முறைப்படுத்த நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர்களின் இருப்பிடம், உணவு, பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்த விழிப்புணர்வு நிலை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
குடியிருப்பு வசதிகளை உருவாக்கித்தந்தால் திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் நம்பிக்கையோடு வருவார்கள். நீண்ட காலமாக இருக்கும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க இதுவும் ஒரு வழியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு அனைத்து தொழில் அமைப்பினரும், தொழிற்சங்கத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த கோரிக்கை நிறைவேறும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: