Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by Unknown in ,    
மதுரையை அடுத்த மணலூரில் இருந்து மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை மதுரை மாநகராட்சி மீண்டும் செயல்படுத்துகிறது. இதற்கென மணலூர் நீரேற்று நிலையத்தில் ரூ.16.4 கோடியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சிப் பகுதிக்கு வைகை ஆற்று படுகையின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டங்களில் மணலூர், திருப்புவனம் குடிநீர்த் திட்டமும் உள்ளது. 1983 இல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நீண்டநாள்கள் ஆனதால், இத்திட்டக் குழாய்கள் பாதிக்கப்பட்டன. வெடிப்புகள் அதிகம் ஏற்பட்டு தண்ணீர் கசிந்தது. மேலும் பெறப்படும் நீரின் தன்மையும் குடிப்பதற்கு உகந்ததற்ற நிலையில் இருந்தது. இதனால், இத் திட்டம் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து வருகிறது.
இத்திட்டத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ரூ.16.4 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இத் திட்டம் 3 பகுதிகளாக (பேக்கேஜ்) நிறைவேற்றப்பட உள்ளது.
முதல் பகுதியில், திருப்புவனம் முதல் மணலூர் நீரேற்று நிலையம் வரை 350 மிமீ விட்டம் உள்ள சிமெண்ட் குழாய்கள், இரும்புக் குழாய்களாக மாற்றப்படுகின்றன. இதற்கு ரூ.2.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதி பணியில் ரூ.3.7 கோடியில், மணலூர் நீரேற்று நிலையத்தில் தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மூன்றாவது பகுதியில், மணலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து மதுரை தெப்பக்குளம் வரையுள்ள 450 மிமீ விட்டமுள்ள சிமெண்ட் குழாய்கள், இரும்புக் குழாய்களாக மாற்றப்படுகின்றன. இப்பணி ரூ.10.43 கோடியில் மேற்கொள்ளப்படும். இந்த மூன்று பகுதிக்கும் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, முதல்கட்டமாக சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.
மணலூரில் இப்பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன், நகரப் பொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையர் செல்லப்பா, மண்டலத் தலைவர் சண்முகவள்ளி மற்றும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்தின்படி, மணலூர் நீர்உறிஞ்சு கிணற்றில் இருந்து பெறப்படும் நீரைச் சுத்திகரிப்பு செய்து, திருப்புவனத்தில் இருந்து பெறப்படும் குடிநீருடன் சேர்த்து தினமும் 8 மில்லியன் லிட்டர் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர், தெப்பக்குளம் தரைமட்டத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு மேலமடை, வண்டியூர், ஐராவதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இப்பணியை ஓராண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments: